பேச்சு நடத்துவோம், போராட்டத்தைக் கைவிடுங்கள்- நெடுவாசலில் பவ்யம் காட்டிய பொன்.ராதா
நெடுவாசல் சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் போராட்டத்தைக் கை விடுமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலுக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டத்தைக் கைவிடுமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
புதுக்கோட்டை நெடுவாசலில் 22ஆவது நாளாகப் போராட்டம் நடந்து வருகிறது. முதன்முறையாக மத்திய அரசின் சார்பாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் போராடும் மக்களைச் சந்திக்க வந்தார். அவருடன் பாஜக நிர்வாகி கருப்பு முருகானந்தமும் வந்தார்.
மக்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் ''நான் ஒரு கட்சியின் சார்பாக வரவில்லை. நான் உங்களில் ஒருவனாக வந்திருக்கிறேன். நானும் ஒரு காலத்தில் விவசாயி. ஆகையால் விவசாயத்தில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள் எனக்குத் தெரியும்.
இந்தத் திட்டம் பாஜக அரசு கொண்டு வந்ததில்லை. ஆனால் பிரதமர் மோடி அரசு, மக்களின் விருப்பம் இல்லாமல் எந்தத் திட்டத்தையும் திணிக்காது.
மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக போராட்டத்தைக் கைவிட வேண்டும். மத்திய எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திராவை14 அல்லது 15 ஆம் தேதி சந்திக்க நேரம் வாங்கி, அவரை சந்திப்பதற்கு முயற்சி செய்கிறேன். எதையும் நான் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார் பொன் ராதாகிருஷ்ணன்.