பொங்கல் பரிசு திட்டத்தை தொடங்கி வைத்த ஜெயலலிதா: ரேசன் கடையில் இலவச வேட்டி சேலை விநியோகம்
சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, 5 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பொங்கல் திருநாளை ஒட்டி தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதன்படி, 1 கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 318 கோடி ரூபாய் செலவில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி கரும்பு மற்றும் 100 ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. பொங்கலுக்கு முன்னரே நியாய விலைக் கடைகள் மூலம் இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை ஏழை, எளிய, சாமானிய மக்கள் சீரோடும் சிறப்போடும் கொண்டாடும் வகையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு 318 கோடி ரூபாய் செலவில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடிநீளக் கரும்புத் துண்டு மற்றும் 100 ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு, பொங்கல் திருநாளுக்கு முன்னரே நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று நேற்று அறிவித்தார்.
பொங்கல் சிறப்பு பரிசு
பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகிய 1 கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடிநீளக் கரும்புத் துண்டு மற்றும் 100 ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிடும் அடையாளமாக 5 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி துவக்கி வைத்தார்.
இலவச வேட்டி சேலைகள்
கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கவும், அதன்மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், 1983-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.இத்திட்டத்தில் கடந்த ஆண்டு முதல் பாலிகாட் சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது.
3.35 கோடி பேருக்கு வேட்டி, சேலை
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் ஒரு கோடியே 68 லட்சத்து 4 ஆயிரத்து 986 சேலைகள், ஒரு கோடியே 67 லட்சத்து 89 ஆயிரத்து 404 வேட்டிகள் வழங்கப்பட உள்ளன. மொத்தம் 3.35 கோடி பேருக்கு வேட்டி, சேலை வழங்க ரூ.486 கோடியே 36 லட்சம் ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
நியாயவிலைக்கடைகளில் கூட்டம்
இந்நிலையில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா சிலதினங்களுக்கு முன்னர் தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து நியாயவிலைக்கடைகளில் விநியோகம் செய்யப்பட்டதால் ஏராளமான மக்கள் அவற்றை பெற்றுச் சென்றனர். மயிலாப்பூரில் ஏராளாமான மக்கள் வரிசையில் நின்று இலவச வேட்டி, சேலையை வாங்கிச்சென்றனர்.
கூடுதல் பணிச்சுமை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலை, பொங்கல் பை ஆகியவற்றோடு வழக்கம் போல் ரேஷன் பொருட்களையும் வழங்க வேண்டியிருப்பதால், கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது என்று ரேஷன் கடை ஊழியர்கள்கள் புலம்பி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1 கோடியே 91 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் மற்றும் பொங்கல் பை, இலவச வேட்டி சேலைகள் வழங்கும் பணி ரேஷன் கடை ஊழியர்கள் மீது சுமத்தப்படுகிறது.
ஊக்கத்தொகை கிடைக்குமா?
இது போன்ற பணிகளை கிராமநிர்வாக அலுவலர், வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இக்கடுமையான பணிகளை செய்யும் எங்களுக்கு எந்த ஊக்கத் தொகையையும் நிர்வாகம் வழங்குவதில்லை. பொங்கல் பண்டிகையின் போது நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைக்கும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 3 நாட்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று பல முறை அரசிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர்.