பொங்கல் சீர் சுமந்து வர்றாங்க…
தை பொங்கல் திருநாளை கொண்டாடும் பெண்ணுக்கு சீர் கொண்டு செல்வது தமிழர் மரபு.தன்னுடன் பிறந்த சகோதரியை திருமணம் செய்து கொடுத்த பின்னர் அந்தப் பெண்ணின் அனைத்து நல்லது, கெட்டதுக்கும் துணை நிற்கும் சகோதரனின் மிகப்பெரிய கடமைகளுள் ஒன்று... பொங்கல் சீர்!
புதிதாக மணம்முடித்த பெண்ணுக்கு, பிறந்த வீட்டில் இருந்து, இரண்டு வெண்கல பொங்கல் பானைகள், கரண்டிகள், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, நெய், கடலைப்பருப்பு, கரும்பு மற்றும் சாப்பாட்டுக்குரிய காய்கறிகள், மளிகை பொருட்கள், துணிமணி என அனைத்தும் இந்த சீரில் இடம்பிடிக்கும்
தமிழர்களின் ஒவ்வொரு விழா, சடங்குக்குப் பின்னணியிலும் பாரம்பரியமும், வரலாறும் இணைந்து கிடக்கின்றன. புத்தாடை அணிந்து, பொங்கல் சமைத்து, செங்கரும்பு சுவைத்து, உற்றார் உறவினரோடு கூடி மகிழும் இந்தப் பண்டிகையின் ஓர் அங்கம்தான் சீர்வரிசை.
தாய்வீட்டு சீர்
திருமணமாகிச் சென்ற பெண்கள், கணவரின் வீட்டில் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடத் தேவையான அத்தனை பொருள்களையும் தாய் வீட்டில் இருந்து சீர்வரிசையாக அனுப்பி வைக்கும் வழக்கம் தமிழரிடத்தில் பாரம்பரியமாக இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சில குடும்பங்களில் ஆண்டுதோறும் சீர் கொடுப்பர். சில குடும்பங்களில் திருமணமான முதல் ஆண்டு கொண்டாடும் தலைப்பொங்கலுக்கு மட்டும் சீர் வரிசை கொடுப்பர்.
கறிவிருந்து
பொங்கலுக்கு முன்பாக வரும் பதினைந்து, ஒன்பது, ஏழு என வசதிப்பட்ட ஒற்றைப்படை நாளில், சொந்த பந்தங்களை அழைத்துக் கொண்டு, பெண் வாழ்க்கைப்பட்டிருக்கும் வீட்டுக்குச் செல்வார்கள். அந்த வீட்டு சொந்தபந்தங்கள் கூடி நின்று வரவேற்பார்கள். வீட்டின் கூடத்தில் சீரை பரப்பி வைத்து, பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் புது வேட்டி, புடவையில் தங்கள் வசதிக்கேற்ப பணம் வைத்து கொடுப்பார்கள். இதனையடுத்து சீர் கொண்டு வந்தவர்களுக்கு பெரும் விருந்து நடக்கும்.
சீர் சுமந்த சாதி சனமே
பெண்ணின் தாய், தந்தை மறைந்த பின்னும்... அவளுடைய சகோதரர்கள் காலாகாலத்துக்கும் சீர் வைப்பதை தொடர்கிறார்கள். சகோதரர்கள் இல்லாவிட்டால், வீட்டின் மூத்த சகோதரி... தானே தாயாகவோ, சகோதரனாகவோ மாறி, இளைய சகோதரிகளுக்கு சீர் அனுப்புவதும் உண்டு.
சகோதர பாசம்
முன்பெல்லாம் ஆண்டாண்டுகளுக்கும் தொடர்ந்த இந்த பொங்கசீர் கால மாற்றத்தின் விளைவால் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது., இப்போதெல்லாம் அடுத்தடுத்த வருடங்களில் பெரும்பாலும் மணியார்டரில் பணமாகத் தொடர்கிறது. அதேசமயம், நேரில் சென்று கொடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தொன்றுதொட்டுத் தொடர்ந்து, இன்று அண்ணன் - தங்கை உறவை பலப்படுத்தும் அன்பாயுதமாகவும் பயணப்படுகிறது. தலைமுறை தலைமுறையாக உறவுகளையும் தழைக்க வைத்துக் கொண்டிருக்கிறது பொங்க சீர்.
பொங்கலோ பொங்கல்!