தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஒரு பிரேக்-மழை வரப்போகுது- வானிலைஆய்வு மையம்
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு மாதகாலமாக சுட்டெரித்த அக்னியின் அனலை தாங்க முடியாமல் தவித்து வரும்நிலையில், வருண பகவான் சில மாவட்டங்களுக்கு மட்டும் கருணை காட்டியுள்ளார்.
ஒரு மாத காலமாக கத்தரி வெயிலைபோல, 100 டிகிரியை தொட்டு வெப்பம் கனன்று கொண்டிருக்கிறது, இதில் மின்வெட்டும், அனல்காற்றும் சுழட்டியெடுத்து விடுகிறது. மற்றொரு புறம், புழுக்கம், மின்வெட்டு போன்றவற்றின் பிடியில் சிக்கி தவித்து வருகிறோம். கோடை விடுமுறை காலமென்றாலும் குழந்தைகள் விளையாட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டும் மழை பெய்து மக்களை குளிர்த்துள்ளது.

வேலூரில் 99.3 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில் நேற்று மாலை நேரத்தில் லேசான சாரல் மழை பெய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஆம்பூர், அணைக்கட்டிலும் காற்றுடன் கூடிய மழையும் பெய்தது.
அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரை மணி நேரம் தொடர் மழையும், அவ்வப்போது லேசான மழையும் பெய்து விவசாயிகளையும் பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நெல்லை மாவட்டம் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக விடிய விடிய மழை பெய்துள்ளது. இதன் மூலம் வெப்பத்தின் தாக்கம் குறைந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதில் சங்கரன்கோயில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது.
கோடையில் ஆலங்கட்டி மழை என்பது அரிதான விஷயம். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். .அரியலூர் மாவட்டம் செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் குளிருடன் கூடிய காற்று வீசுகிறது. இதனிடையே, தமிழகத்தின் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை திருச்சி புள்ளம்பாடியில் 5 செமீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications