"லுங்கி" கட்டி நடமாட தடையா.. விவசாயிகள் தலைவர் பி.ஆர். பாண்டியன் கொந்தளிப்பு!
சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் லுங்கி அணிந்து வந்த தன்னை போலீசார் தடுக்க முயன்ற சம்பவத்திற்கு பி.ஆர் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் லுங்கி அணிந்து வந்த காரணத்திற்காக போலீசார் தன்னை தடுக்க முயன்ற சம்பவத்திற்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழுத் தலைவர் பி.ஆர் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் இது காவலர்களின் தன்னிச்சையான நடவடிக்கையல்ல, ஏதோ திட்டமிட்டு உள்நோக்கத்தோடு தமிழர் பண்பாட்டை சீர்குலைக்கும் செயல் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து பி.ஆர் பாண்டியன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:
சென்னை எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதன்படி இன்று (02.03.2017) காலை 7.00 மணிக்கு லுங்கி அணிந்து நடை பயிற்ச்சி | சென்றேன் முகப்பில் நின்றிருந்த பாதுகாவலர் லுங்கி அணிந்து நடை பயிற்ச்சி செல்லக் கூடாது என்று வழிமறித்தார் நான் அதிர்ச்சியடைந்தேன்.
தமிழனின் அடையாளம்
நாகரீமான முறையில் தமிழ் சமுதாயத்தில் அனுமதிக்கப்பட்ட உடை லுங்கி. அதனை அணிந்து வருவதற்கு தடை விதிக்க யாருக்கும் அனுமதியில்லை என்றும் மனித உரிமை மீறிய செயல் என்று சொல்லிவிட்டு இந்த தடையை ஏற்று நிர்வாக கட்டுப்பாடு என்று நினைத்து திரும்பி சென்றால் நமது அன்றாட வாழ்க்கை முறையே கேள்விக்குறியாகி விடும் ஜனநாயக விரோத செயலுக்கு நாம் துணை போய்விடக் கூடாது என்றும் இச்செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தடையை பொருட்படுத்தாமல் உள்ளே நடைபயிற்சி மேற்கொண்டேன்.
மன உளைச்சல் அடைந்தேன்
மீண்டும் 4 காவலர்கள் ஒன்று சேர்ந்து மிரட்டும் தொனியுடன் என்னை நடக்க கூடாது என்று வழிமறிக்க முற்பட்டனர். நான் ஏற்க மறுத்து உங்கள் நடவடிக்கையால் நான் மன உளைச்சல் அடைந்தேன். இது மனித உரிமை மீறி செயல் இதனை வன்மையாக கண்டிக்கிறேன். முன் அறிவிப்பு எதுவுமில்லாமல் இப்படி செயல்படுவது ஜனநாயக நாட்டில் ஏற்க்கதக்கதல்ல. பெரியார் பிறந்த மண்ணில் வாழுகிறோமா?என்ற வேதனைக்கு ஆளானேன்.
மக்கள் வலியுறுத்தல்
நான் லுங்கி அணிந்தது சட்டவிரோத மென்றால் உங்கள் உயர் அதிகாரிகளிடமோ, காவல் துறையிடமோ புகார் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு தொடர்ந்தேன். இந்த செயலை கேள்வி பட்ட பலரும் இதனை நீங்களாவது வெளி உலகுக்கு கொண்டு வாருங்கள் என்று வலியுறுத்தினர்.
தமிழர் பண்பாட்டை அழிக்க முயற்சி
இது ஏதோ காவலர்களின் தன்னிச்சையான நடவடிக்கையல்ல ஏதோ திட்டமிட்டு உள்நோக்கத்தோடு தமிழர் பண்பாட்டை சீர்குழைக்கும் செயல். இதன் பின்புலம் குறித்து விசாரித்து முளையிலேயே கிள்ளியெறிய் பட வேண்டும்.
போராட்டம் நடத்த வேண்டும்
இதனை காலத்தில் தடுப்பது அனைத்து முற்போக்கு சிந்தனையாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய நெருக்கடியான தருணம் என்று பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.