விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள்.. தமிழகத்தில் களைகட்டிய கொண்டாட்டங்கள்
விடுதலை புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 62வது பிறந்த நாள் தமிழகத்தில் இன்று பரவலாக கொண்டாடப்பட்டது.
சென்னை: விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இலங்கை தமிழர்களுக்காக அந்த நாட்டு அரசை எதிர்த்து ஆயுதப்போராட்டம் நடத்திய இவர், இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரபாகரனின் 62வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடை இன்னும் தொடர்ந்தபோதிலும், பிரபாகரன் பிறந்த நாளை பல்வேறு அரசியல் கட்சிகளும் கொண்டாடின.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் ஈரோட்டில் ஏற்பாடு செய்திருந்த நூல் வெளியிட்டு விழா ஈரோட்டில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் எழுதிய விடுதலை முகவரி பிரபாகரன், நெருப்புக்கு பூச்சாண்டி நூல் வெளியிடப்பட்டது. இதில் வைகோ பங்கேற்று பிறந்த நாளை அனுசரித்தார்.
சென்னை, அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கேக் வெட்டி பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடினார்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. திரளான இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர். மீஞ்சூர் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு மருந்துபொருட்கள் அடங்கிய பெட்டியையும் அக்கட்சியினர் பரிசாக வழங்கினர்.
கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கேட் வெட்டியும், பட்டாசு வெடித்தும் பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடினர். இதேபோல இலங்கையிலும், தமிழர்கள் பலரும் அவரது பிறந்த நாளை கொண்டாடினர். ஆனால் அரச தரப்பு கண்காணிக்கும் என்ற அச்சத்தோடே அங்கு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்தது.