தீபாவளி நெருங்குவதால் பட்டவர்த்தனமாக பகல் கொள்ளையடிக்கும் ஆம்னி பஸ்கள்!
சென்னை: வெளிப்படையாகவே ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் நிலையிலும், தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் கண், வாய் மூடி கண்டுகொள்ளாமல் இருப்பது பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டீசல் விலை உயர்வு, மத்திய அரசின் சேவை வரி உயர்வு போன்ற காரணங்களால் சமீபத்தில் பேருந்துக் கட்டணத்தை 10 முதல் 20 சதவீதம் வரை ஆம்னி பேருந்து நிறுவனங்கள் உயர்த்தின. தீபாவளிப் பண்டிகையின்போது இந்தக் கட்டணம் 30 முதல் 40 சதவீதம் வரை உயர்த்தப்படும் எனவும் அறிவித்திருந்தன.
அதன்படி, சாதாரணக் காலங்களில் சென்னையிலிருந்து கோவைக்கு சாதாரணப் பேருந்துகளில் ரூ.715ம், குளிர்சாதனப் பேருந்துகளில் ரூ.880ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தீபாவளி ஜோர்
தீபாவளிப் பண்டிகை காலத்தில் சாதாரணப் பேருந்துகளில் ரூ.845ம், குளிர்சாதனப் பேருந்துகளில் ரூ.1040ம் என்ற அளவுக்கு வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், தீபாவளிப் பண்டிகை பயணத்துக்கான கட்டணத்தை, அறிவித்ததை விட பன்மடங்கு உயர்த்தியிருப்பதாக இணையதளத்தில் முன்பதிவு செய்த பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
அதிரடி சரவெடி
உதாரணத்துக்கு, கடந்த வாரம் வரை சென்னையிலிருந்து கோவைக்கு சாதாரண ஆம்னி பேருந்தில் ரூ.850 என்ற அளவில்தான் கட்டணம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இணையதளத்தில் வெள்ளிக்கிழமை முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு தனியார் ஆம்னி பேருந்தில் சாதாரணக் கட்டணம் ரூ.1000 என்ற அளவிலும், மற்றொன்றில் ரூ.1,199 என்ற அளவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பகிரங்கமான பகல் கொள்ளை
தனியார் வெப்சைட்டுகளில் பகிரங்கமாக இந்த கட்டண உயர்வு இடம் பெற்றுள்ளது. 350 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பெங்களூர்-சென்னைக்கு கூட ஆம்னி பஸ்கள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணத்தை வசூலிக்கின்றன. இத்தனையும் பகிரங்கமாக நடைபெற்றும் தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் மவுனம் சாதிக்கின்றனர்.
போராடுவது யார்?
ஏழைகளுக்கான வாகனமாக இருந்த ரயில்வேயும், ஆம்னிக்கு நிகராக கட்டண கொள்ளையடிக்க ஆரம்பித்துள்ளது பிரீமியம் ரயில் என்ற பெயரில். இதனை தட்டி கேட்க வேண்டிய கட்சி தொண்டர்களோ பரஸ்பரம் அடித்துக்கொண்டும், ஒருவரும் கிடைக்காவிட்டால் தங்களுக்கு தாங்களே மொட்டையடித்துக் கொண்டும் அலைகின்றனர்.