விபத்தில் கால் முறிவு.. அதிமுக பிரமுகர் தமிழ்மகன் உசைன் மகனை கைது செய்ய கோரி சாலை மறியல்
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் அதிமுக பிரமுகர் மகன் கார் மோதி இருவர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரும், வக்பு வாரியத்தின் தலைவராக இருப்பவர் ஏ. தமிழ்மகன் உசைன். இவரது மகன் நவாஸ். நேற்று முன்தினம் இரவு 12.30 மணியளவில் நண்பர்களுடன் ஹெல்லிஸ் சாலையில் காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்த பாதர் தோட்டத்தை சேர்ந்த வினோத் மற்றும் அவருடைய நண்பர் மீது கார் மோதியதாக கூறப்படுகிறது. இதில் வினோத்தின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து காரை விட்டு இறங்கிய ஒருவர், நான் தமிழ் மகன் உசைன் (அதிமுக) மகன் நவாஸ். என்னை ஒண்ணும் பண்ணமுடியாது ஒழுங்கா போய்டுங்க என்று மிரட்டிதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடனே பொதுமக்கள் மற்றும் வினோத்தின் நண்பர்கள் ஐந்து போரையும் மடக்கி பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
பொது மக்கள் மடக்கி பிடித்தும், நவாஸ் மீதும் அவரது நண்பர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வினோத்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்டார் திரை அரங்கம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்து வந்த போலீசாரிடம் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய நவாஸ் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறினர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.