காங்கிரஸ் திட்டத்தை காப்பியடிக்கும் பாஜக : புதுவை முதல்வர் நாராயணசாமி கிண்டல் - வீடியோ
மத்தியில் ஆளும் பாஜக அரசு, காங்கிரஸ் கட்சியின் திட்டங்களைக் காப்பியடித்து செயல்படுத்துகிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கிண்டலடித்துள்ளார்.
புதுச்சேரி: மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மூன்றாண்டு காலமாக எந்த புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. காங்கிரஸின் திட்டங்களைக் காப்பியடித்துத்தான் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடந்த வெள்ளையனே வெளியேறு 75ஆம் ஆண்டு விழாவில் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசினார். மேலும், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
அப்போது பேசிய அவர், மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சி, இதுவரை எந்த புதிய திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அது காங்கிரஸ் செயல்படுத்திய திட்டங்களுக்கு பெயரை மட்டும் மாற்றி செயல்படுத்துகிறது என கூறினார்.
Recommended Video
பணமதிப்பிழப்பு அறிவிப்பு, ஆதார் அட்டை, ஜிஎஸ்டி என இவை அனைத்தும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்ட செயல் திட்டங்கள் என்பதை காங்கிரஸ் நிர்வாகிகளே பலமுறை கூறியுள்ளனர்.
பணமதிப்பிழப்பு அறிவிப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜிஎஸ்டி குறித்து காங்கிரஸ் யோசித்துக்கொண்டிருந்தது. ஆனால் பாஜக அவசரப்பட்டு, எந்த திட்டமிடலும் இல்லாமல் அதனை செயல்படுத்தி மக்களை சிக்கலுக்குள்ளாக்கி விட்டது என அவரது கட்டுரைகளிலும் பேட்டிகளிலும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.