ஒப்பந்தக்காரர்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி.. ஊழல் பட்டியலுக்கு பிடபிள்யூடி பொறியாளர்கள் கண்டனம்
சென்னை: சென்னைப் பொதுப்பணித்துறையில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் பட்டியல் என ஒப்பந்தக்காரர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளதற்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியே காரணம் என்று பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு பொதுப்பணித் துறை பொறியாளர்கள் சங்கம் மற்றும் உதவி பொறியாளர்கள் சங்கத்தின் அவசர தலைமை செயற்குழு கூட்டம், கடந்த 9 ஆம் தேதி சென்னையில் நடந்தது. இதில், பொதுப்பணித் துறை பொறியியல் ஒப்பந்ததாரர் சங்கம் சார்பில், கடந்த சில நாட்களாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், உண்மைக்கு புறம்பான செய்திகள் ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
பொதுப்பணித் துறைக்கும், பொறியாளர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்துவதும், அரசின் நற்பெயரை சீர்குலைப்பதும் தான் அவர்களது நோக்கமாக உள்ளது என்று தெரிவித்து ஒப்பந்ததாரர்களின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக பொறியாளர் சங்கத் தலைவர் கே.மோகன்ராஜ், பொதுச் செயலாளர் ரா.ரவிராஜ் (பொறியாளர் சங்கம்) மற்றும் பொதுச்செயலாளர் பி.கார்த்திகேயன் ( உதவிப் பொறியாளர் சங்கம்) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த சில தினங்களாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் ஊடகங்களில் பரப்பி பொதுப்பணித் துறைக் கும், பொதுப்பணித் துறை பொறி யாளர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்துவதுடன் தமிழக அரசின் நற்பெயரை சீர்குலைக் கும் வகையில் செயல்படுகிறது. இது முற்றிலும் ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளாகும். மேற்கண்ட குற்றச்சாட்டுகளை எங்கள் சங்கம் முற்றிலுமாக மறுக்கின்றது.
இச்செயலை தமிழ்நாடு பொதுப் பணித் துறை பொறியாளர் சங்கம் மற்றும் உதவிப் பொறியாளர் சங்கம் வன்மையாக கண்டிக் கிறது. பொதுப்பணித்துறை கிட்டதட்ட 150 ஆண்டுகளுக்கும் மேலாக அரசிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அரியபெரிய அரசின் திட்டக்கள் மற்றும் அரசுக் கட்டிடங்கள் ஆகியவற்றை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செவ்வனே செயல்படுத்தி வருகின்ற துறையாகும்.
மேற்கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பொதுப்பணித்துறையில் பணிபுரியும் பொறியாளர்களுக்கு மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்துவதுடன் துறையின் பெருமையையும் சீர்குலைக்கும் விதமாக உள்ளது. துறையின் பொறியாளர்கள் தவறு செய்தது உண்மையானால் விதிமுறைகளின்படி அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க பொறியாளர் சங்கம் ஒத்துழைக்கும்.
காழ்ப்புணர்ச்சியுடன், உள்நோக்கத்துடன் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வரும் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினரை வன்மையாக கண்டிக்கிறோம். இச்செயலை பொறியாளர் சங்கம், உதவி பொறியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.