தேர்தல் விதிமீறல்கள் புகார்களுக்கு இ-நேத்ரா, 100 கேமராக்கள் கண்காணிப்பு... சொல்கிறார் சக்சேனா
சென்னை: ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் அலுவலகம் இருக்கிறதா? தேர்தல் அதிகாரிகள் செயல்படுகிறார்களா? என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இடைத்தேர்தல் தொடர்பான புகார்களை ஒருங்கிணைக்கவும், உடனடி தீர்வு காணவும் ‘இ-நேத்ரா முறைமை' திட்டம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அறிமுகப்படுத்தியுள்ளது.
27ம்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில், முதல்வர் ஜெயலலிதா வேட்பாளராக போட்டியிடுவதால் 28 அமைச்சர்கள், 38 எம்.பி.க்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் அங்கு குவிந்துள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்ற புகார் ஒருபுறம் இருக்க, ஆளுங்கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைகூலியாகிவிட்டதாகவும் எதிர்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
சந்தீப் சக்சேனா பதில்
எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, தேர்தலில் வாகனங்கள் மற்றும் பொருட்களின் நடமாட்டத்தை கண்காணிக்க மே 28ம் தேதி முதல் 6 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள், 28 பறக்கும் படைகள், 3 வீடியோ கண்காணி்ப்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
வார்டுக்கு 4 குழு
வார்டுக்கு 4 கண்காணிப்பு குழுக்கள் வீதம் கண்காணிப்பு குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பறக்கும் படையினருக்கு வயர் லெஸ் தொடர்பு கருவியுடன் அவர்கள் வாகனங்களில் புவித்தகவல் குறியீட்டு முறை (ஜிபிஎஸ்) சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே முதன் முறையாக
ஆர்.கே.நகர் தொகுதி நிகழ்வுகள், தேர்தல் பிரச்சாரத்தை கண்காணிக்க இந்தியாவிலேயே முதல்முறையாக 100 இன்டர்நெட் புரோட்டாக்கால் கேமராக்கள் தொகுதியின் முக்கியமான பகுதிகளில் பொருத்தப்பட்டு தொடர்ந்து பதிவு செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.
இ-நேத்ரா முறை
தேர்தல் தொடர்பான புகார்களை ஒருங்கிணைக்கவும் உடனடி தீர்வு காணவும், ‘இ-நேத்ரா முறை' அறிமுகப்படுத்தப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இத்திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றியடைந்தால் அடுத்த தேர்தல்களில் பயன்படுத்தப்படும் என்றும் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
6 முறைகளில் புகார்
இம்முறையில், தேர்தல் நடத்தை விதி மீறல், முறைகேடுகள் குறித்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆறு வழிகளில் புகார் அளிக்கலாம். ‘பிளே ஸ்டோரில்' இருந்து பதிவிறக்கம் செய்யும் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன் மூலம் அதில் அளிக்கப்பட்டுள்ள படிவத்தில் புகார் பதிவு செய்யலாம்.
புகார் அளிப்பது எப்படி?
இதுதவிர ‘[email protected]' என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அல்லது 94441 23456 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பலாம். 1950 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம். இது தவிர மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு எழுத்து மூலம் புகார் அளிக்கலாம் அல்லது ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் உதவி மையங்களில் நேரடியாக சென்று புகார் தெரிவிக்கலாம்.
கள ஆய்வு மூலம் நடவடிக்கை
தேர்தல் தொடர்பான புகார்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் பெற வசதியாக முதல்முறையாக ஐவி ஆர் எஸ் முறை செயல் படுத்தப்பட்டுள்ளது. இந்த 6 வகை களிலும் பெறப்படும் புகார்களுக்கு பதிவு எண் அளிக்கப்பட்டு புகார் அளிப்பவருக்கு தெரிவிக்கப்படும். புகார்கள் பெறப்பட்டதும் அதன் தன்மையை பொறுத்து கள ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜி.எம்.எஸ் டேப்லெட்கள்
புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து புகார் பெறப்பட்ட முறையிலேயே புகார் தாரருக்கு 2 மணி நேரத்திலிருந்து 24 மணி நேரத்துக்குள் தகவல் அனுப்பப்படும். பறக்கும் படையினர் மற்றும் நிலைக்குழுவினர் புகார் களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் அவர்களுக்கு ஜிஎஸ்எம் டேப்லெட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த முறையில் புகார் அளித்தவர் பற்றிய தகவல்கள் பாதுகாக்கப்படும். அதே நேரம் புகார் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் குறித்து இணையதளத்தில் பொதுமக்கள் காணும் வகையில் வெளியிடப்படும் என்றும் சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.
துணை ராணுவப்படை
இதனிடையே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் துணை ராணுவப்படையின் 10 குழுவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார். இதில் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 குழுக்களும், இந்திய-திபெத் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 குழுக்களும், மத்திய துணை ராணுவப் படையைச் சேர்ந்த 2 குழுக்களும் ஆர்.கே.நகருக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்றுமுதல் பாதுகாப்பு
முதல் கட்டமாக, 5 குழுவினர் வியாழக்கிழமை முதல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 குழுவினரும், துணை ராணுவப் படையைச் சேர்ந்த ஒரு குழுவினரும் இன்று வந்துள்ளனர். மீதமுள்ள குழுவினர் வரும் 23ம் தேதி முதல் ஆர்.கே.நகருக்கு வரவுள்ளனர்.
2,569 வழக்குகள்
ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறியதாக இதுவரை 2 ஆயிரத்து 569 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், உரிமம் பெற்ற 31 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்ட தடுப்புப் பிரிவின் கீழ் 188 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிணையில் வெளிவரமுடியாத 86 உத்தரவுகள் இதுவரை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.
கேமராக்கள் செயல்படுகிறதா?
தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையிலும், ஆர்.கே.நகரில் அதிமுகவினர் நாளுக்கு நாள் விதிகளை மீறி வருவதாகவே புகார்கள் எழுந்து வருகிறது. விதிமீறல்களை கண்காணிக்க தேர்தல் ஆணையம் பொருத்தியுள்ள 100 கேமராக்களும் செயல்படுகிறதா? என்பது எதிர்கட்சியினரின் கேள்வியாக உள்ளது.