கருணாநிதியை போலவே விரைவில் ஸ்டாலினை பற்றி பெருமையாக பேசுவோம்... ராகுல்
சென்னை: பணமதிப்பிழப்பு விவகாரத்தை கொண்டு வந்ததன் மூலம் மக்களின் பணத்தை ஒரே நாளில் செல்லா காசாக்கிவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.
கருணாநிதியின் 94-ஆவது பிறந்தநாள் விழாவும், அரசியலுக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவானதை தொடர்ந்து வைரவிழாவும் இன்று மாலை நடந்தது.
இந்த விழாவில் ராகுல் காந்தி பேசுகையில், கலைஞர் நீடுழி வாழ வேண்டும். இன்னும் பல பிறந்தநாள்களை கொண்டாட வேண்டும். அனைத்து மக்களின் துயரங்களையும் அறிந்து வைத்துள்ளவர் கலைஞர். தமிழக மக்கள் கலைஞரை ஆழமாக நேசிக்கின்றனர். சட்டபேரவை தேர்தலில் தோல்வியை கண்டிராதவர்.
அனைத்து குரல்களும் ஒன்றிணைந்தால் இந்தியாவின் ஒற்றுமைக்கும் வலுசேர்க்கும். தமிழக மக்களுக்காக தினமும் காலையில் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். யாரையும் கேட்காமலேயே மக்களின் பாக்கெட்டில் உள்ள பணத்தை செல்லாது என்று அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. பண மதிப்பிழப்பு உத்தரவால் நாட்டு பொருளாதாரம் சரிந்துவிட்டது என்று உலகமே சொல்கிறது. அருண் ஜேட்லிக்கு இது தெரியவில்லை, சொல்ல மறுக்கிறார்.
பண மதிப்பிழப்பு விவகாரம் குறித்து ஜேட்லியிடம் கூட மோடி ஆலோசிக்கவில்லை. மத்திய அரசின் தான்தோன்றி தனமான செயல்பாடு இதுதான். எதிர் கருத்துகளை ஒழிப்பதுதான் அவர்கள் நோக்கம். மத்தியில் இருப்பவர்கள் கலந்துரையாடுவதில் நம்பிக்கை இல்லை.
மிகச் சரியான பாதையில் ஸ்டாலின் சென்று கொண்டிருக்கிறார். கருணாநிதியின் இடத்தை நிரப்ப வேண்டிய பெரும் பொறுப்பு ஸ்டாலினுக்கு உள்ளது. எனக்கு நம்பிக்கையுள்ளது, கருணாநிதியை போலவே ஒரு காலத்தில் ஸ்டாலினை பற்றி பெருமையாக பேசுவோம்.
நாட்டில் ஒரேமாதிரி கலாச்சாரம் இருக்க வேண்டும் என்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு இந்த கொள்கையில் துளியும் ஒப்புதல் இல்லை. ஆர்எஸ்எஸ்சும், மோடியும் ஒரே கலாசாரத்தை திணிக்க முற்படுவதை அனுமதிக்க கூடாது என்றார் அவர்.