கடலூரில் மீண்டும் பலத்த மழை...!
கடலூரில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. கடந்த ஒரு மணி நேரமாக பெய்யும் மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியுள்ளது.
கடலூர் : கடலூரில் ஓய்ந்திருந்த மழை மீண்டும் வெளுத்து வாங்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரு மணி நேரமாக பெய்து வரும் மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 27-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றக்கிழமை மாலை முதல் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கடலூர் நகரில் நேற்று காலை 6 மணி முதல் 7 மணி வரை பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து மாலை வரையிலும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில் இரவு 7 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கடலூரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இந்த மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது.
இதேபோல் கடலூர், பண்ருட்டி, கண்டரக்கோட்டை, அண்ணாகிராமம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சிதம்பரத்தில் 3 சென்டிமீட்டர் மழையும், கடலூரில் 2 சென்டிமீட்டர் மழையும் பெய்தது.
கடந்த 2 நாட்களாக கடலில் கடல் சீற்றமும், சூறை காற்றும் வீசுவதால் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் துறைமுக பகுதியிலும், கடற்கரை ஓரத்திலும் விசைப்படகுகளும், பைபர் படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சற்று ஓய்ந்திருந்த மழையானது தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. கடலூரில் மாலையில் பெய்யத் தொடங்கிய மழை ஒரு மணி நேரமாக நீடிக்கிறது. இதனால் மீண்டும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியுள்ளது. இதே போன்று கடலூர் மாவட்டம் முழுவதுமே பரவலாக மெழை பெய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.