குரோம்பேட்டை அரசு மருத்துவமனியில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் பெரும் அவதி
தாம்பரம்: சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மழைநீர் புகுந்ததால் அங்கு சிகிச்சைப்பெற்று வரும் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
சென்னை புறநகரில் பெய்த பலத்த மழை காரணமாக நேற்று காலை முதல் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து மழைநீர் வெளியில் செல்லும் கால்வாய்கள் நிரம்பியதால் மழைநீர் முழுவதும் மருத்துவமனைக்குள் புகுந்தது.

மழைநீர் உள்ளே புகுந்து விடாமல் இருக்க மருத்துவமனையின் நுழைவு வாயில் பகுதியில் மண்மூட்டைகளை அடுக்கி தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர். ஆனால் அதையும் மீறி மருத்துவமனையின் கீழ் பகுதி முழுவதும் மழைநீர் புகுந்தது. பிரசவ வார்டு, பொது மருத்துவ பிரிவு, ரத்த பரிசோதனை பிரிவு, மாத்திரைகள் வழங்கும் இடம் என அனைத்து பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது.
இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த புற நோயாளிகளும் கடும் அவதி அடைந்தனர். மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெறும் அறைகளில் கட்டிலுக்கு கீழ் பகுதி முழுவதும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. மருத்துவமனைக்குள் தேங்கி நிற்கும் தண்ணீரை ஊழியர்கள் வெளியேற்றி வருகின்றனர்.
மோட்டார் வைத்து மழைநீர் அகற்றப்பட்டாலும், மழை தொடர்ந்து பெய்வதால் மருத்துவமனைக்குள் தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் சிகிச்சை பெற வந்தவர்களை மருந்து, மாத்திரைகள் கொடுத்து அனுப்பி வருகின்றனர். உள்நோயாளிகள் மழை தண்ணீருக்குள் வேறு வழி இன்றி சிகிச்சை பெற்று வருகின்றனர். அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதால் இருட்டிலும், மழைநீரிலும் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் புகுந்து உள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications