Exclusive: ஹைட்ரோ கார்பன் பற்றி ரஜினி வாய் திறக்காதது ஏன்...? ராஜேஸ்வரிபிரியா விளாசல்
சென்னை: ரஜினிகாந்த் கருத்தை பொறுத்தவரை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், அவரை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க தேவையில்லை எனவும் கூறுகிறார் அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா.
துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியது தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அது பற்றிய தனது கருத்தை ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக பதிவு செய்துள்ளார் ராஜேஸ்வரி பிரியா.
அதன் விவரம் பின்வருமாறு;
கவனம்
''துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என நினைக்கிறேன். ஏனென்றால் அவர் முதலில் அரசியலுக்குள் வரட்டும், அரசியலா, சினிமாவா என்பதில் இதுவரை ஒரு நிலைப்பாட்டை எடுக்காதவர் ரஜினி. திடீர் திடீர்னு மாற்றி மாற்றி பேசுபவர் அவர். பொதுவா சொல்லனும் என்றால் புரிந்துகொள்ள முடியாத ஒரு கேரக்டராக ரஜினி இருக்கிறார். எந்த விஷயத்தை பேசினால் சர்ச்சையாகும் என்பதை அறிந்து அவருக்கு எழுதிக்கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட் அது. அட்வைஸர்கள் எழுதிக்கொடுத்ததை துக்ளக் விழாவில் ரஜினி கூறிவிட்டுச் சென்றுள்ளார்''.
ரஜினிக்கு கேள்வி
''அரசியலுக்கு வருவதாக கூறும் ரஜினி மக்கள் பிரச்சனைகளை பற்றி பேச மறுப்பது ஏன் எனத் தெரியவில்லை. நேற்று முன் தினம் செய்தியாளர்களை சந்தித்தாரே ரஜினி, அப்போது கூட ஹைட்ரோ கார்பனை பற்றி வாய் திறக்கவில்லை. சிவகாசியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தது பற்றியும் அவர் பேசவில்லை. மக்கள் சந்திக்கும் எந்தப் பிரச்சனைகளை பற்றியும் ரஜினிகாந்திடம் இருந்து ஒரு கருத்து வருவதில்லை. ஆனால், தனது பேச்சுக்கு விளக்கம் அளிக்க மட்டும் செய்தியாளர்களை சந்தித்து தன் தரப்பு கருத்தை மட்டும் கூறிவிட்டுச் செல்கிறார். இதை எப்படி பார்ப்பது என தெரியவில்லை''.
நம்ம இடத்திற்கு பிரச்சனை வரும்.. இப்போதே எதிர்ப்போம்.. ரஜினியை அதிமுக கண்டிக்க இதுதான் காரணம்!?
சோதனை
''ரஜினிக்கு பின்னால் அரசியல் கட்சி இருக்கிறது என நான் கூறமாட்டேன். ஆனால் அவருக்கு பின்னால் யாரோ ஒரு நபர் இருக்கிறார். அதை யார் என்று சொல்லமாட்டேன். ரஜினியை பேசவைத்து திராவிடம் தொடர்பாக மக்களிடம் ஆழம் பார்க்கப்பட்டதோ என எனக்கு எண்ணத் தோன்றுகிறது. ரஜினியின் பேச்சை தவிர தமிழகத்தில் வேறு எதுவுமே நடக்காதது போல் கடந்த 4 நாட்களாக இதைப் பற்றியே பேசுவதை நினைத்தால் வேடிக்கையாக உள்ளது''
ஆக்கப்பூர்வம்
''ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுத்து மக்கள் பிரச்சனைகளை மையமாக வைத்து ஒரு நிலையான செயல்பாட்டில் இருந்தால் ரஜினிக்கு நானே ஆதரவு தெரிவித்து வரவேற்பேன். ஆனால் இது எதுவுமே அவரிடம் இல்லையே. அதனால் ரஜினியின் பேச்சை பெரிதாக எடுத்துக்கொண்டு அதைப்பற்றி விவாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை''