ஜன.22-ல் அயோத்திக்கு போகாமல் ’மோட்ச நகரம்’ காஞ்சிபுரம் வரும் நிர்மலா சீதாராமன்- இதுதான் காரணமாம்!
சென்னை: அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை காஞ்சிபுரத்தில் பொதுமக்களுடன் இணைந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் தாம் காண இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். இதை முன்னிட்டு, ஜனவரி 22 அன்று மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரத்திற்கு வருகை தர உள்ளார்.

கருட புராணம், பிரம்மாண்ட புராணம்: அயோத்தியைப் போலவே காஞ்சிபுரமும் ஏழு 'மோட்ச நகரங்களில்’ ஒன்றாகக் கருதப்படுகிறது. காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் தசரத மன்னன் 'புத்திரகாமேஷ்டி யாகம்’ செய்வதை விளக்கும் சிற்பம் உள்ளது. காஞ்சிபுரத்திற்கும் அயோத்திக்கும் உள்ள தொடர்பு பிரம்மாண்ட புராணம் மற்றும் கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்வுகள்: காஞ்சிபுரத்தில் ஸ்ரீ ராம கீர்த்தன பாராயணம், கலைமாமணி திரு நாகை முகுந்தன் அவர்களின் கம்ப ராமாயண உபந்யாசம், பத்ம பூஷண் திருமதி. சுதா ரகுநாதன் மற்றும் குழுவினரின் 'பஞ்சரத்ன கீர்த்தனைகள், பல்வேறு புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார். தியாகராஜர், சதாசிவ பிரம்மேந்திரர், அருணாச்சல கவி, பத்ராசல ராமதாஸர், அன்னமாச்சார்யா, புரந்தர தாசர் உள்ளிட்ட வாக்கேயக்காரர்களின் கீர்த்தனைகளும், சிலப்பதிகாரக் காப்பியம் குறித்த நிகழ்வும் நடைபெறுகின்றன.
காஞ்சிபுரத்தில் இருந்து.. : இதைத்தொடர்ந்து, அயோத்தியாவில் பிரதமர் மோடி, கலந்து கொள்ளும் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் இணைந்து காணொலிக் காட்சி மூலம் காண உள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எஸ்எம்ஜி சூர்யா மஹால் அருகே அமைந்துள்ள ராஜாராம் கார்டனில் காலை 8.00 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வுகளில் அனைத்து பக்தர்களும் பங்கேற்கலாம். காஞ்சிபுரம் மகாநகர் ஆன்மீக பேரவை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
ஏரி காத்த ராமர் கோவில் தூய்மை பணி: முன்னதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜனவரி 21 அன்று, மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த ராமர் கோவிலில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்பின்னர், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள உபநிஷத பிரம்மேந்திர மடத்துக்குச் செல்கிறார். தொடர்ந்து ஸ்ரீ வரதராஜ சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்கிறார். இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications