குடிசை வீடுகளுக்கு ரூ.25 ஆயிரமாக நிவாரணத் தொகை உயர்த்தி வழங்க ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை
சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடிசை வீடுகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதாது. அதை ரூ. 25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரழிவை கொஞ்சமும் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் செய்யப்பட்ட அறிவிப்பாகவே இது உள்ளது என்பதை தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக் காட்டுகிறது.
முற்றிலும் அழிந்து போன குடிசை வீடுகளுக்கு ரூ. 10 ஆயிரம்தான் என்பது, அவர்கள் குடிசையை மீண்டும் அமைத்துக் கொள்ள எந்தவிதத்திலும் உதவாது. எனவே, முழுமையாக பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கான நிவாரணத்தை ரூ. 25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
ஓட்டு வீடுகளுக்கும் சேதத்திற்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும். இதர வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தும், சூழ்ந்தும் தங்களின் மொத்த உடைமைகளையும் மக்கள் இழந்துள்ளனர். அவர்களின் இழப்பிற்கேற்ப நஷ்ட ஈடு வழங்க அரசு முன்வர வேண்டும். பயிர்பாதிப்பிற்கு அறிவித்துள்ள தொகையை விவசாயிகள் கூலிக்காக செலவழித்த தொகையை ஈடுகட்ட கூட பயன்படாது. நெல் பயிர்களுக்கு 33 சதத்துக்கும் அதிகமான இழப்புக்கு மட்டும் ஏக்கருக்கு ரூ. 5,400 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல், மரவள்ளி, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க வேண்டும். வாழை, கரும்பு, வெற்றிலை போன்ற பயிர்களுக்கு இழப்பீடு தொடர்பாக எந்தவிதமான விவரமும் இல்லாமல் இருக்கிறது. இவற்றிற்கு ஏக்கருக்கு 1 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். ரப்பர், சவுக்கு, நாற்றங்கால் ஆகியவற்றிற்கும் இழப்பீடு வழங்குவதுடன் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
பயன்படுத்த முடியாமல் சேதமடைந்த பாசனக்கிணறுகள், பம்புசெட்டுகள் ஆகியவற்றை சீரமைக்க அரசு உரிய உதவிகள் செய்ய வேண்டும். நிவாரணம் தொடர்பான அறிவிப்பில், மீனவர்கள், நெசவாளர்கள், சிறுவியாபாரிகள், சிறுதொழில் பாதித்தவர்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் படகுகளை இழந்துள்ளனர். நெசவாளர்கள் தறியை இழந்துள்ளனர்.
சிறுகடைகள் , மளிகை கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இவர்கள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு பாதிப்பிற்கேற்ப இழப்பீடு வழங்க வேண்டும்.
கடந்த ஒரு மாத காலமாக பெய்து வரும் மழையால் விவசாய தொழிலாளர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள், உப்பளத்தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள் உட்பட எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் கடன் வாங்கி சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு தலா 5000 ரூபாய் வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
லேப்-டாப், பாடபுத்தகம் ஆகியவற்றை இழந்த மாணவர்களுக்கு அரசு புதிதாக வழங்க வேண்டும். மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்றுள்ள கடன் வசூலை 6 மாத காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும். வங்கி கணக்கில்லாத குடும்பங்களுக்கு உயரதிகாரிகள் முன்னிலையில் முழுதொகையும் வழங்கப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் கிடைப்பதை அரசு உறுதி செய்வதோடு, எவ்வித முறைகேடு நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.