ராம்குமாருக்கு ஜாமீன் கேட்ட வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி வழக்கில் இருந்து திடீர் விலகல்!
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாருக்கு ஆதரவாக வாதாடப்போவதில்லை என அவருக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் கடந்த 1ம் தேதி நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமாரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
கைது செய்வதற்காக போலீசார் சென்றபொழுது ராம்குமார் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியானது. சிகிச்சைக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராம்குமார்.
கிருஷ்ணமூர்த்தி
இந்நிலையில், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ராம்குமாருக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். சுவாதியை ராம்குமார் கொலை செய்யவில்லை என்றும் கிருஷ்ணமூர்த்தி தனது மனுவில் கூறியிருந்தார்.
கழுத்தை அறுத்தது யார்?
மனு தாக்கலுக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணமூர்த்தி, போலீசாருடன் சென்ற நபர்கள்தான் ராம்குமார் கழுத்தை அறுத்தனர். அவர் தற்கொலைக்கு முயலவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
சர்ச்சை
கிருஷ்ணமூர்த்தி பரபரப்பை கிளப்பிய நிலையில், அவர் ராம்குமார் குடும்பத்தாரிடம் அனுமதியின்றி சுயமாக சென்று ஆஜரானதாக சர்ச்சை எழுந்தது. நேற்று ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வக்கீல் ஜெகன், இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.
வாதம்
கிருஷ்ணமூர்த்தி வாதிடுகையில், சிவில் வழக்குகளில்தான் வக்காலத்து தேவை, கிரிமினல் வழக்குகளில் அதுவும் குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் இருக்கும்போது அவரிடம் ஒப்புதல் பெற்று வாதிட தேவையில்லை என்று கூறினார். ராம்குமார் குடும்பத்தார் மகேந்திரன் என்ற வக்கீலை அணுகியதாகவும், அவருக்கு உதவியாக தான் ஆஜரானதாகவும் நிருபர்களிடமும் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
விலகுவதாக அறிவிப்பு
இந்நிலையில், ராம்குமார் வழக்கில் இருந்து வெளியேறுவதாக முகநூல் பதிவில் கிருஷ்ணமூர்த்தி இன்று தெரிவித்துள்ளார். தனது ஜூனியர்களுக்கு உதவவே வழக்கிற்குள் வந்ததாகவும், அதுவும் ஜாமீன் விவகாரத்திற்கு மட்டுமே என்றும் கூறியுள்ள கிருஷ்ணமூர்த்தி விமர்சனங்கள் அதிகரிப்பதாகவும் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், ராம்குமாருக்கு உதவ முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆதரவு, எதிர்ப்பு
கிருஷ்ணமூர்த்தியின் முடிவுக்கு முகநூலில் ஆதரவு மற்றும் மறுப்பு என இருவேறு வகை குரல்களை பார்க்க முடிந்தது. வழக்கறிஞர், டாக்டர்கள் போன்றோர் குற்றவாளியின் குற்றத்தை பார்த்து கடமையை செய்ய கூடாது, எனவே விலகல் முடிவை கைவிட வேண்டும் என்று சிலரும், நல்ல முடிவு எடுத்தீர்கள் என சிலரும் கருத்து கூறினர்.
பல காரணங்கள்
ராம்குமார் குடும்பத்தார் சம்மதம் இன்றி கிருஷ்ணமூர்த்தி ஆஜரான சர்ச்சை, இந்த வழக்கில் போலீசாருக்கு எதிராக அவர் கூறிய கருத்துக்களால் எழுந்த சர்ச்சை, பெண் வக்கீல்கள் கோர்ட்டில் திரண்டு வந்து ராம்குமாருக்கு ஜாமீன் வழங்க கூடாது என கூறி போராடிய விவகாரம் என பல விஷயங்கள் கிருஷ்ணமூர்த்தி முடிவுக்கு காரணம் என தெரிகிறது.