சீழ் பிடித்த கர்ப்பப்பை அகற்றம்... சென்னைப் பூனைக்கு நடந்த அரியவகை ஆபரேஷன்!
சென்னை: சென்னையில் பூனை ஒன்றிற்கு அரிய வகை கர்ப்பப்பை நீக்கும் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப் பட்டுள்ளது.
சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த பீட்டர் என்பவர் தனது வீட்டில் சிக்கி என்ற பூனையை வளர்த்து வருகிறார். தற்போது நான்கு வயதாகும் அந்த பூனை கடந்த சில நாட்களாக சரியாக சாப்பிடாமல் வாந்தி எடுத்தபடி இருந்துள்ளது. உடல் நலக் குறைவால் அவதிப்பட்ட சிக்கியைப் பல தனியார் மருத்துவமனைகளில் காட்டியுள்ளார் பீட்டர். ஆனால், பூனை உடல் நலமடையவில்லை.
அதைத் தொடர்ந்து, சிக்கி பூனை, ‘மதராஸ் கால்நடை துயர் தடுப்புக் கழகம் (எஸ்.பி.சி.ஏ) கொண்டு வரப்பட்டது. அங்கு பூனையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதன் கர்ப்பப்பையில் நோய்த் தொற்று ஏற்பட்டு சீழ் கட்டியிருப்பதைக் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து அக்கழகத்தின் கவுரவ செயலாளர் தி.தியாகரஜன் உத்தரவின் பேரில், சிக்கி பூனைக்கு கால்நடை மருத்துவர் ஆர்.சொக்கலிங்கம் ‘ஓவரியோ ஹைஸ்ட்ரக்டமி' எனும் அரிய வகை அறுவைச் சிகிச்சை செய்தார்.
இதன்மூலம், 200 மிலி சீழ் அடங்கிய சிக்கியின் கர்ப்பப்பை வெற்றிகரமாக அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது சிக்கி ஆரோக்கியமாக இருப்பதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.