குட்டக் குட்ட குரல் கொடுக்கும் பிரகாஷ் ராஜ்... இது அரசியலுக்கு எதிரான அரசியல்!
சமீப காலமாக நடிகர் பிரகாஷ்ராஜ் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்திற்கும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
சென்னை: சமீப காலமாக நடிகர் பிரகாஷ்ராஜ் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்திற்கும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதில் இருந்து சமுதாயத்தில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனையிலும் தனது பார்வையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பிரதமர் மோடி தொடங்கி நடிகர் கமல்ஹாசன் வரை அனைவரையும் குறித்து இவர் சமீப காலத்தில் பேசியுள்ளார். பல மொழியில் நடிப்பவர் என்பதால் இவரது கருத்துக்கள் தேசிய அளவில் வைரல் ஆகிறது.
இவரது கருத்துக்களுக்கு நிறைய பேர் ஆதரவும், நிறைய பேர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கோபத்தின் தொடக்கம்
பிரகாஷ்ராஜ் பொதுவாக அரசியல் சார்ந்த கருத்துக்களை பேசுபவர் கிடையாது. இவரது அரசியல் பார்வையை அடியோடு மாற்றிய சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. கவரி லங்கேஷ் கர்நாடகாவில் பத்திரிக்கா என்ற பெயரில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இவர் சில நாட்களுக்கு முன்பு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட கவுரி லங்கேஷ் பாஜக கட்சி குறித்தும், ஆர்.எஸ்.எஸ்.எஸ் இயக்கம் குறித்தும் , அவர்களை எதிர்த்தும் நிறைய கட்டுரைகளை எழுதியுள்ளார். இந்த சம்பவம் பிரகாஷ்ராஜை பெரிய அளவில் பாதித்து இருக்கிறது.
மோடி சிறந்த நடிகர்
இதன் பின்தான் பிரகாஷ்ராஜ் வெளிப்படையாக பேச ஆரம்பித்தார். பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் மரணம் குறித்து கருத்து தெரிவிக்காமல் மௌனமாக இருந்தார் பிரதமர் மோடி. இந்நிலையில் பிரகாஷ் ராஜ் மோடியை ஒரு சிறந்த நடிகர் என விமர்சித்தார். அதுமட்டும் இல்லாமல் அவர் தான் வாங்கிய அனைத்து விருதுகளையும் மோடிக்கே திரும்பவும் அளிக்க இருப்பதாக கூறினார்.
எந்த வழக்கும் அஞ்சாதவர்
இதையடுத்து பிரகாஷ் ராஜ் மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மோடிக்கு களங்கம் விளைவிக்கிறார் என கூறப்பட்டது. ஆனால் அதற்கும் அஞ்சாத பிரகாஷ் ராஜ் ``எந்த வழக்கையும் எதிர் கொள்வேன், யாருக்கும் அஞ்ச மாட்டேன்`` என கூறினார். இவரது இந்த பதிலுக்கு பெரிய அளவில் ஆதரவு வந்தது.
எது தீவிரவாதம் என்று விளக்குங்கள்
சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் ஒரு பேட்டியில் இந்து தீவிரவாதம் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கமல்ஹாசனின் கருத்துக்கு ஆதரவாக பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்தார். அதில் ''மதத்தின் பெயரில், கலாச்சாரத்தின் பெயரில் மக்களை பயமுறுத்தும் உங்கள் செயலுக்கு பெயர் தீவிரவாதம் இல்லை என்றால் எதற்கு பெயர் தீவிரவாதம்'' என்று கோபமாக கேட்டார். இதற்கு பாஜகவைச் சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தவறு
பெங்களூரில் நேற்று மாலை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பிரகாஷ்ராஜ் ''நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்கு பேரழிவை உண்டாக்கும். நடிகர்கள் அரசியல் கட்சியில் சேருவதையும் விரும்பவில்லை. அவர்கள் கட்சி தொடங்க கூடாது. கமல்ஹாசன் தொடங்கும் கட்சியில் நான் எப்போதும் சேரப்போவதில்லை. உபேந்திரா, ரஜினி என யார் தொடங்க போகும் கட்சிக்கும் நான் ஆதரவு அளிக்க மாட்டேன்'' என்று குறிப்பிட்டார்.
இதுவும் அரசியல்தானே சார்!
நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்து பேசிய பிரகாஷ்ராஜ் கூட ஒரு வகையில் அரசியல் செய்து கொண்டுதான் இருக்கிறார். தினமும் நடக்கும் ஒவ்வொரு அநீதிக்கும் எதிராக குரல் கொடுத்து வருகிறார். முக்கியமாக யாருக்கும் அஞ்சாமல் தனது கருத்தை வெளிப்படையாக தெரிவிக்கிறார். அரசியல் என்பது கட்சி தொடங்குவது மட்டுமில்லை. நிகழ்கால அரசியலுக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பேசும் கருத்துக்கள் கூட சிறந்த அரசியல் தான்.