மறுவாக்கு எண்ணிக்கை கேட்டு வழக்கு போடுவதால் திருமாவளவனுக்கு பலனில்லை- வைகோ
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட்ட காட்டுமன்னார் கோவில் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது பயனளிக்காது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுபோன்று நீதிமன்றத்திற்கு போன வழக்குகளில் நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு, அடுத்த தேர்தலின் போதுதான் தீர்ப்புகள் வந்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 87 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு காரணமாகவும், வாக்குச்சாவடி எண் 81-ல் முறையாக வாக்குப்பதிவு நடக்காததாலும் தாம் தோல்வியுற்றதாக அவர் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் மனு அளித்துள்ளார். ஒரு வார்டில் மறுவாக்குப்பதிவு நடத்தவும், அத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவும் அந்த மனுவில் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற பிறகு, அதில் மற்ற வேட்பாளர்களுக்கு அதிருப்தி மற்றும் ஆட்சேபம் இருந்தால், நீதிமன்றம் மூலமே மட்டுமே தீர்வுகாண முடியும் என்று தெரிவித்தார். இதனையடுத்து உயர்நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளார் திருமாவளவன்.
இதனிடையே நேற்று மதிமுக தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய வைகோ, தொடர்ந்து சட்டசபை தேர்தல் முடிவுகள் பற்றி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.
பணநாயகம் வென்றது
இந்த தேர்தலில் சில இடங்களில் அ.தி.மு.க. அதிகமாகவும், சில இடங்களில் தி.மு.க. அதிகமாகவும் என ரூ.500 முதல் ரூ.5,000 வரை பணம் விநியோகம் செய்துள்ளன. முழுக்க முழுக்க பணம் தான் இந்த தேர்தலை தீர்மானத்தது.
தொண்டர்கள் துவளவில்லை
இந்த அநீதியை எதிர்த்து போராடும்போது, உடனடியாக வெற்றி பெற முடியாது. தேர்தலில் எங்கள் கட்சி தோல்வியைத் தழுவினாலும், மதிமுக தொண்டர்கள் யாரும் துவண்டுவிடவில்லை. தேர்தலில் தோல்வி அடைந்தாலும், அவர்கள் இன்னும் உற்சாகமாகத்தான் இருக்கின்றனர்.
நாங்கள் போராளிகள்
நாங்கள் போராளிகள், அநீதிகளை எதிர்க்க துணிந்தவர்கள். அதனால், நாங்கள் தொடர்ந்து போராடி ஜனநாயகத்தை மீட்டு எடுப்போம். நாங்கள் தொடர்ந்து மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து வருகிறோம். மீண்டும் மக்களிடத்தில் செல்வோம் என்றார்.
பயன்அளிக்காது
தொல்.திருமாவளவன் போட்டியிட்ட தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது பயனளிக்காது என்றும் வைகோ கூறினார்.
ஆட்சி முடியும் போது தீர்ப்பு.
கடந்த காலங்களில் இதுபோன்று நீதிமன்றத்திற்கு போன வழக்குகளில் நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த தேர்தலின் போதுதான் தீர்ப்புகள் வந்துள்ளன என்றும் வைகோ கூறியுள்ளார்.