சட்டசபையில் எதிரொலித்த வேட்டி விவகாரம்.. கிரிக்கெட் கிளப் மீது நடவடிக்கை: தமிழக அரசு
சென்னை: வேட்டிக்கு தடை விதித்தது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்ட கிளப் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் வேட்டி அணிந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பான பிரச்னையை தமிழக சட்டசபையில் இன்று எழுப்பிய எதிர்க்கட்சிகள், கடும் கண்டனம் தெரிவித்தன.
ஸ்டாலின் கண்டனம்
சட்டப் பேரவை இன்று தொடங்கி சிறிது நேரத்தில், தி.மு.க. உறுப்பினர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், வேட்டிக்கு தடை விதித்த நிறுவனம் மீது நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தினார்.
தேமுதிக சந்திரகுமார்
தே.மு.தி.க உறுப்பினர் சந்திரகுமார், வேட்டி அணிந்தவர்களுக்கு அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது என்றார்.
ஆங்கிலேயர் ஆட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சவுந்திரராஜன் பேசுகையில், ஆங்கிலேயர் ஆட்சி தொடர்கிறதோ என்ற ஐயம் எழுகிறது என்றார்.
பண்பாட்டு சீர்குலைவு
இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஆறுமுகம் கூறுகையில், வேட்டிக்கு தடை விதித்தது பண்பாட்டு சீர்குலைவு என்றார்.
சட்டப்படி நடவடிக்கை
இதையடுத்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி பதில் அளித்து பேசுகையில், வேட்டிக்கு தடை விதித்த விவகாரத்தில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும், இந்த விவகாரம் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.