திருச்சி தொழிற்சாலை விபத்தில் 19 பேர் பலி - சிதறிய பாகங்களை கண்டு கதறிய உறவினர்கள்
திருச்சி அருகே தோட்டா தொழிற்சாலை வெடி விபத்தில் பாலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயிரிழந்துள்ளது. தொழிற்சாலைக்குள் சிதறிக்கிடந்த உடல்பாகங்களைக் கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.
சென்னை: துறையூர் அருகே முருங்கப்பட்டியில் உள்ள தோட்டா தொழிற்சாலையில் மொத்தம் 7 பிரிவுகள் உள்ளன. ஷிப்ட் 6 மணிக்குத் தொடங்கிய ஒன்றேகால் மணி நேரத்துக்குப் பிறகு காலை 7 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது. நிலத்தடியில் இருந்த ஆலையின் 4-வது பிரிவில் வெடிவிபத்து ஏற்பட்ட போது 22 தொழிலாளர்கள் இருந்துள்ளனர். இதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற 4 பேர் கதி என்னவானது என்பது மர்மமாகவே உள்ளது.
சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியை சேர்ந்த பிரவீன் வெடி விபத்தில் பலியானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களை பார்வையிட உறவினர்களுக்கு போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினரை மட்டும் ஆலைக்குள் சென்று பார்வையிட போலீஸ் அனுமதித்துள்ளது. தொழிலாளர்களின் உறவினர்கள் ஆலையை முற்றுகையிட்டதை அடுத்து போலீஸ் அனுமதி அளித்தது. சிதறிக்கிடந்த உடல் பாகங்களைக் கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.
விபத்து நடந்த ஆலையில் பாறைகளை தகர்ப்பதற்கான வெடிமருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தோட்டா தயாரிக்கும் ஆலையின் உரிமையாளரை கைது செய்ய பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வெடிமருந்து ஆலையால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு கால்நடைகள் உயிரிழப்பதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மாசுகட்டுப்பாட்டு வாரியமும் விபத்து நடந்த ஆலை அதிபருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் வெடிமருந்து ஆலையால் நிலத்தடி நீர் விஷமாகி விட்டதை மாசுகட்டுப்பாட்டு வாரியம் மறைப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.