பஞ்சாலைகளுக்கு வரி வருமானம் அளிக்க வேண்டும்: பஞ்சாலை சங்கங்கள் கோரிக்கை
பஞ்சாலைகளுக்கு வரி வருமானம் அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Recommended Video
கோவை: பெட்ரோல், டீசல், மின்சாரம் ஆகியவற்றை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வந்து பஞ்சாலைகளுக்கு வரி வருமானம் அளிக்க வேண்டும் என பஞ்சாலை சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சீமா மற்றும் பருத்தி ஜவுளி ஏற்றுமதி கூட்டமைப்பான டெக்ஸ்புரோசில் ஆகிய சங்கங்களின் ஆலோசனை கூட்டம் கோவை சீமா அரங்கில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் டெக்ஸ்புரோசில் அமைப்பின் தலைவர் உஜ்வால் லகோதி பேசினார். அப்போது அவர் பேசியதாவது-
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவிற்கான பருத்தி நூல் ஏற்றுமதி குறைந்துள்ளது. அதே சமயம், வியட்னாமில் இருந்து சீனாவில் இறக்குமதியாகும் பருத்தி நூலின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வியட்னாமில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி வரிகள் இல்லை. இருந்தாலும், இந்திய பருத்தி நூலின் தரம் காரணமாக தொடர்ந்து ஏற்றுமதி இருந்து வருகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 60 ஆயிரம் புதிய ஸ்பிண்டில்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. பழைய ஸ்பிண்டில்கள் மாற்றப்பட்டு வருவதால் இந்தியாவில் பருத்தி உற்பத்தி அதிகரித்தபோதும் நூல் உற்பத்தி அதிகரிக்கவில்லை. பஞ்சாலைகள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், மின்சாரம் ஆகியவற்றிற்கு இதுவரை ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படவில்லை. லாபம் குறைவதை கருத்தில் கொண்டு இவற்றை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வந்து பஞ்சாலைகளுக்கு வரி வருமானம் அளிக்க வேண்டும்.
கலப்பட பஞ்சை கண்டறிய அரசு கண்காணிப்பு குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பஞ்சாலை சங்கங்கள் அளித்துள்ள கோரிக்கைகள் குறித்து மத்திய ஜவுளித்துறை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பில் சீமா தலைவர் நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.