ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதா? – நள்ளிரவு ரெய்டுக்கு ஆர்கே நகர் மக்கள் கடும் எதிர்ப்பு
சென்னை: ஆர்.கே நகர் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிரடி படையினர் நள்ளிரவில் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நள்ளிரவில் வீடு வீடாக புகுந்த அதிரடிப்படையினர், அங்குள்ள பொருட்களையும் சோதனை என்ற பெயரில் கலைத்துப் போட்டதாக கூறப்படுகிறது.
அதிரடிப்படையினரின் இந்த நடவடிக்கை கடும் எதிர்ப்பு தெரிவித்த மக்கள், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக புகார் தெரிவித்தனர். நள்ளிரவில் பெண்கள், குழந்தைகள் இருக்கும் வீடு என்று கூட பாராமல் போலீசார் அனைவருக்கும் தொல்லை கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவித்தனர்.
ஆனால் ஆர்.கே.நகர் பகுதியில் பலத்த பாதுகாப்பிற்கு இடையிலும் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக எழுந்த புகாரை தொடர்ந்தே இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பல கட்சி பிரமுகர்கள் இரவில் மக்களை வீட்டிற்கே வரவைத்தும், அவர்களே வீடு வீடாக சென்றும் பணம் அளித்து வருவதால் தான் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தொண்டர்களும், மக்களும் அதிரடிப்படையினர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக சில இடங்களில் அவர்களே பணப்பட்டுவாடா செய்வதற்கு உடந்தையாக இருந்ததாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற சோதனையில் பணப்பட்டுவாடா தொடர்பாக யாரையும் அதிரடிப்படையினர் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.