ரூ.10 நாணயத்தை யாரேனும் வாங்க மறுத்தால்.. இதைப் படிங்க மக்களே முதல்ல!
ரூ.10 நாணயத்தை யாரேனும் வாங்க மறுத்தால் தேச துரோக வழக்கு பதிவு செய்யலாம் என்று உத்தரப்பிரதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: ரூ.10 நாணயம் செல்லாது என்று சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால் அந்த நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். அவ்வாறு மறுத்தால் குற்றவியல் சட்டப்படி தேச துரோக வழக்கே பதிவு செய்யலாமாம்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிக மதிப்புடைய நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஏராளமான வதந்திகள் கிளம்பின.
அதாவது புதிய ரூ.100, ரூ.200 நோட்டுகள் அடிக்கப்படவுள்ளது, ரூ.2000 நோட்டை செல்லாததாக அறிவிக்க திட்டமிடுகிறார்கள், ரூ.10 நாணயம் செல்லாது என்று அந்த வதந்திகள் கச்சை கட்டிப் பறந்தன.
விளக்கம் கொடுத்தும் ஏற்காத வணிகர்கள்
இதையடுத்து இந்திய ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சகமும் அப்படியெல்லாம் எந்தத் திட்டமும் இல்லை என்று விளக்கமளித்தன. இருந்தபோதிலும் அவற்றை வணிகர்களும், பொதுமக்களும் ஏற்கவில்லை.
குறியீடு இல்லாததால்
அந்த நாணயத்தில் கரன்சிக்கான குறியீடு ஏதும் இல்லாததால் அது செல்லாது என்றே மக்கள் கருதுகின்றனர். கடந்த 2009-ல் தயாரிக்கப்பட்ட ரூ. 10 நாணயங்களில் கரன்சிக்கான குறியீடு இல்லை என்றாலும் கூட அவை செல்லும் என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்திவிட்டது.
யாரும் நிராகரிக்க முடியாது
இந்நிலையில் ரூ.10 நாணயங்கள் வாங்காதது குறித்து உத்தரப்பிரதேச மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ரூ.10 நாணயம் தேசிய கரன்சியாகும். அந்த நாணயங்களின் மதிப்பை இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. எனவே அதை ஏற்க மறுக்கும் உரிமை யாருக்கும் இல்லை.
தேசதுரோக வழக்கே போடலாம்
ரூ.10 நாணயங்களை வாங்க யாரேனும் மறுத்தால், அவர்கள் மீது தேசதுரோக வழக்கை பதிவு செய்யலாம். ஆர்பிஐ விதிமுறைகளை எடுத்துக் கூறி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவாகும் வழக்குகளின் மீது காவல்துறையும் விசாரணையை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.