ஓகி புயலால் தமிழகத்தில் ரூ.1000 கோடி சேதம்...கணக்கெடுப்பு அதிகாரி தகவல்
ஓகி புயலால் தமிழகத்தில் ரூ. 1000 கோடி சேதம் அடைந்துள்ளதாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்: ஓகி புயலால் தமிழகத்தில் ரூ. 1000 கோடி சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 30-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான ஓகி புயல் தென் தமிழகத்திலும், கேரளத்தின் ஒரு பகுதியிலும் பல்வேறு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களின் வீடுகள், மீன்பிடி உபகரணங்கள், மின் கம்பங்கள், வீடுகள், சாலைகள், பயிர்கள் என பல்வேறு வகையில் அதிக சேதம் ஏற்பட்டது.
இந்த சேதங்கள் குறித்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், லட்சக்கணக்கான வாழைகள், ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன.
ரூ.100 கோடி செலவு
ஓகி புயல் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தொடங்கி விட்டது. இதுவரை ரூ.100 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்துக்கு மட்டும் ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
மலைக் கிராமங்களிலும் நாசம்
இந்த பணம் மூலம் ஓகி புயலில் மரணம் அடைந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. உடைந்த மின் கம்பங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை சீரமைக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடற்கரை கிராமங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கு இணையாக மாவட்டத்தின் மலைக்கிராமங்களிலும் பயிர்கள் நாசமாகி உள்ளன.
மறுசீரமைப்புக்கு
மின்கம்பம் சீரமைத்தல், சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மழை காலம் முடிந்தபின்பே மேற்கொள்ள முடியும். இவற்றிற்கும், தென்மாவட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் ரூ.1000 கோடிக்கு மேல் செலவாகும்.
விரைவில் குமரி செல்வார் முதல்வர்
இந்த தொகையினை தமிழகத்தின் பேரிடர் இழப்புத்துறை மூலம் ஈடுகட்ட முடியாது. மத்திய அரசின் நிவாரண நிதி உதவி மூலம் மட்டுமே ஈடுகட்ட முடியும். இதற்காக புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் அளித்து நிதி உதவி பெற வேண்டும். குமரி மாவட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் சென்று பார்வையிடுவார் என்றார் அவர்.