தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதால் ரூ.40,000 கோடி இழப்பு.. மின் பொறியாளர் அமைப்பு புகார்
சென்னை: தனியார் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவதால் மின்வாரியத்துக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் காந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது...
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி மின் தேவை 12,500 மெகாவாட் என கணக்கிடப்பட்டுள்ளது. அனல், புனல் மற்றும் காற்றாலை என மின்சார உற்பத்திக்கு பல வழிகள் இருந்தாலும், தனியாரிடம் கொள்முதல் செய்வதிலேயே கவனம் செலுத்துகிறது மின் வாரியம்.
கடந்த 2012 ஆம் ஆண்டு, 5 ஆண்டுகளுக்கு 1000 மெகாவாட் வீதம் மின் கொள்முதல் செய்யப்படும் என்றது அரசு. அதுவே 2013 ஆம் ஆண்டு கூறும் போது, 15 ஆண்டுகளுக்கு 1000 ஆயிரம் மெகாவாட் வீதம் கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்து விட்டு, அதே ஆண்டில், 3,300 மெகாவாட் அளவுக்கு மின் கொள்முதல் செய்ய 11 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் முழுக்க முழுக்க கொள்முதல் விதிகளை மீறி கையெழுத்தாகியுள்ளது. அதுமட்டுமின்றி சந்தை விலையை விட மிக அதிக விலை கொடுத்து இந்த 11 நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்கப்படுகிறது. இந்த நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் வெளி மாநிலங்களை சேர்ந்தவை. இதில் எத்தனை நிறுவனங்களிடம் மின் கொள்முதல் செய்யப்படுகிறது என்ற முழு தகவலை மின்வாரியம் வெளியிட மறுக்கிறது.
பெறப்படாத மின்சாரத்துக்கும் யூனிட் ஒன்றுக்கு ரூ.2 செலுத்தி வருகிறது. மின்சாரத்தின் சந்தை விலை ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.60 தான். இந்த விலையில் தான் பல மாநிலங்கள் கொள்முதல் செய்கின்றன; தமிழக மின்வாரியம் இந்த 11 நிறுவனங்களுக்கு கொள்முதல் விலையாக யூனிட் ரூ.4.91 என்று மிக அதிக விலை தருகிறது.
மேலும், இந்த 11 தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்வதற்காக ஒழுங்குமுறை ஆணையத்திடம் தவறான பல தகவல்களை மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஒழுங்குமுறை ஆணையமும் கண்டும் காணாதது போல் இருக்கிறது. இதனால் மின்வாரியத்துக்கு ரூ.40 ஆயிரத்து 327 கோடி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஜிஎம்ஆர் நிறுவனம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்த மின்சாரத்தின் விலை யூனிட் ரூ.12.50 என்பதால் அதை வாங்க வேண்டாம் என்று ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டும், வாரியம் நீண்ட காலமாக வாங்கி வந்துள்ளது. ஒப்பந்தம் முடிந்த பிறகு, மேலும் ஓராண்டுக்கு யூனிட் ரூ12.50 விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. இதனால் பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளது. இதை மின்வாரியம் தான் விளக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பு தலைவர் காந்தி கூறினார்.
மின்தேவை இல்லாத நேரங்களிலும் தனியார் நிறுவனங்களுடன் விதிகளை மீறி ஒப்பந்தம், சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு மின் கொள்முதல், கட்டண நிர்ணயம் மற்றும் மின் கொள்முதல் விஷயங்களில் மாநில அரசின் தலையீடு என்று பல சிக்கல்களில் தமிழக மின்வாரியம் தள்ளாடி வருகிறது.
இதே நிலை நீடித்தால் இதன் சுமை நுகர்வோர் தலைமேல் விடியும் எனவும், மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மின் பொறியாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மின்கட்டணம் 15 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக மின்வாரியம் 11 தனியார் நிறுவனங்களுடன் 3,300 மெகாவாட் மின்கொள்முதல் செய்ய கடந்த 2013ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த 11 நிறுவனங்களில் 3 நிறுவனம் தமிழகத்தை சேர்ந்தவை. 3,300 மெகாவாட்டில் 35 சதவீத மின்சாரத்தை இந்த 3 நிறுவனங்கள் விற்கின்றன. மேலும், தமிழகத்தில் ரூ.57 ஆயிரம் கோடியை முதலீடு செய்வதாக முதலீட்டாளர் மாநாட்டில் இந்த மூன்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன என்ற தகவலும் வெளியாகி உள்ளது.