திருவண்ணாமலை அருகே ரூ. 94 லட்சம் பறிமுதல்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட 94 லட்சத்து 23 ஆயிரத்து 700 ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக இரவு நேரத்தில் பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று அதிகாலை முறையாறு பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வாகனத்தை, துணை வட்டாட்சியர் ரமேஷ் தலைமையிலான பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.
அதில், 7 அட்டை பெட்டிகளில் 94 லட்சத்து 23 ஆயிரத்து 700 ரூபாய் பணம், மூன்று பட்டாசு பெட்டிகள் மற்றும் அதிமுக பிரசார நோட்டீசுகள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த பணம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரிலிருந்த ஒருவரை கைது செய்துள்ள காவல்துறையினர், வாகனத்தோடு தப்பியோடிய உதய சங்கர் என்பவரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications