ஆர்எஸ்எஸ் நிர்வாகி படுகொலையை கண்டித்து கேரளாவில் பந்த்- தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்!
கேரளாவில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்டதுக்கு கண்டனம் தெரிவித்து அம்மாநிலத்தில் முழு அடைப்பு நடைபெறுவதால் தொடர்ந்து தமிழகத்திலிருந்து செல்லும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
நெல்லை: திருவனந்தபுரத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் மர்மகும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டதை அடுத்து நடைபெற்று வரூம் முழு அடைப்பு எதிரொலியாக தமிழக பேருந்துகள் கேரளா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(33). அவர் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பி சென்றார்.
அவர் வீட்டுக்குச் செல்லும் வழியில் 6 பேர் கொண்ட கும்பலால் கூர்மையான ஆயுதங்களாள் தாக்கப்பட்டார். மேலும் ராஜேஷின் இடது கையை துண்டாக வெட்டிய அந்த கும்பல் தப்பியோடியது.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ராஜேஷை அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜேஷின் கொலை சம்பவத்தை கண்டித்து கேரளாவில் இன்று முழுஅடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்தது.
இன்று காலை 6 மணி முதல் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் அனைத்தும் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.