திருமண தகவல்களை மறைத்தால் வேட்பாளர் தகுதி இழப்பாரா? தேர்தல் ஆணையர் பதில்
சென்னை: திருமணம் பற்றிய தவறான தகவல்களைக் கூறினால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வழிகாட்டி இருக்கிறது.. அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்போம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று சம்பத் கூறியதாவது:
கேள்வி: திருமணம் பற்றிய தவறான தகவல்களை கூறுவதனால் வேட்பாளரை தகுதி இழக்கச் செய்ய முடியுமா?
பதில்: இதுசம்பந்தமாக இரண்டு தினங்களுக்கு முன்பு தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் வந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்புகள் உள்ளன. அது சம்பந்தமான சட்டங்கள், தீர்ப்புகளின் அடிப்படையில் ஆராய்வோம்.
கேள்வி: தேர்தல் கமிஷன் பாரபட்சமாக செயல்படுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சுமத்தியுள்ளாரே?
பதில்: அதை மறுக்கிறேன். நாங்கள் அனைத்துக் கட்சிகள், வேட்பாளர்களை சரிசமமாக நடத்துகிறோம். இதுசம்பந்தமாக தேர்தல் பணியாளர்களுக்கும் தகுந்த அறிவுரைகளை வழங்கியிருக்கிறோம். சமத்துவத்தை கடைபிடிப்பதில் நாங்கள் உயர்ந்த தரத்தை பராமரிக்கிறோம்.
கேள்வி: வாகன சோதனையில் பல்வேறு துன்பங்களை கடந்து செல்ல வேண்டி உள்ளது என்ற புகார்களுக்கு உங்கள் பதில் என்ன?
பதில்: கையில் உள்ள பணத்துக்கான ஆவணங்கள் இருந்தால் பிரச்சினை கிடையாது. வீட்டுக்குப் போய் எடுத்து வந்து ஆவணங்களைக் காட்டுகிறேன் என்றாலும் நாங்கள் அனுமதிக்கிறோம். துன்புறுத்துகிறோம் என்று எங்களைக் குற்றம்சாட்டிக் கொண்டு ஆவணங்கள் இல்லாமல் பணத்தை கொண்டு செல்ல முடியாது.
கேள்வி: சமூக வலைதளங்களில் செய்யப்படும் பிரசாரங்களை எப்படி கண்காணிக்கிறீர்கள்?
பதில்:- எலக்ட்ரானிக் மீடியாக்களில் செய்யப்படும் விளம்பரம் போலத்தான் அதையும் பார்க்கிறோம். அதற்கான செலவும் அந்த வகையில் கணக்கிடப்படும். இதற்கும் முன்அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.