தமிழகத்தில் ஆட்சி முடங்கியதால் மது ஒழிப்புக்காக சசிபெருமாள் உயிரிழக்க வேண்டிய நிலை: இளங்கோவன்
சென்னை: தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியமிக்க ஆணவப் போக்கின் காரணமாகவே சசி பெருமாள் தமது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய பரிதாபகரமான நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
மது ஒழிப்பிற்காக நீண்டகாலமாக பல்வேறு முனைகளில் அமைதியான முறையில் போராடி வந்த காந்தியவாதி சசிபெருமாள் தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியப்போக்கு காரணமாக தமது உயிரை இழக்க வேண்டிய அவலநிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் பகுதியில் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி செல்பேசி கோபுரத்தின் உச்சியில் ஏறி தமது கோரிக்கைகளை வலியுறுத்த போராட்டத்தில் ஈடுபட்டபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

செல்பேசி கோபுரத்தின் உச்சியில் 5 மணி நேரமாக அமர்ந்து தமது கோரிக்கையை வலியுறுத்தி குரல் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டபோது அவரை காப்பாற்ற மாவட்ட ஆட்சியாளர்களோ, காவல்துறையினரோ எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராததுதான் சசிபெருமாள் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாகும். தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியமிக்க ஆணவப் போக்கின் காரணமாகவே அவர் தமது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய பரிதாபகரமான நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.
தியாகி சசிபெருமாள் தமது கோரிக்கைக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தியபோது தமிழக ஆட்சியாளர்கள் எந்த வகையிலும் கோரிக்கையை பரிவுடன் கவனிக்க தயாராக இல்லை. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க பலமுறை வாய்ப்பு கேட்டும் மறுக்கப்பட்டது. அவரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்த முயன்ற சசிபெருமாள் மிகுந்த ஏமாற்றத்திற்கும், மன உளைச்சலுக்கும் உள்ளானார். இனி தமது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாது என்ற நிலை ஏற்பட்ட பிறகு செல்பேசி கோபுரத்தின் மீது ஏறி, போராட்டம் நடத்த வேண்டிய முடிவுக்கு வந்தார்.
தமிழகத்தில் நடைபெறுகிற ஆட்சி செயல்படாமல் முடங்கிப் போனதால் தான் மது ஒழிப்பு கோரிக்கைக்காக சசிபெருமாள் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. தியாகி சசிபெருமாள் உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications