சசிகலா முன்னிறுத்தும் 3 தளபதிகள்.. மன்னார்குடியின் ஆர்.கே.நகர் ஆப்ரேஷன்
ஆர்கே நகர் தேர்தலை முன்வைத்து சசிகலா குடும்பம் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறார் அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். இந்தத் தேர்தலில் குடும்பத்து உறவினர்கள் தீவிரமாக உழைக்க இருக்கின்றனர். தினகரனுக்கு அடுத்தபடியாக, புதிய தளபதிகளாக மூன்று பேரை முன்னிறுத்த இருக்கிறாராம் சசிகலா.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை குறிவைத்துக் களமிறங்கினார் தினகரன். அவருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினர்.
ஒருகட்டத்தில், தொகுதிக்குள் பாய்ந்த பணக்கட்டுகளைக் கண்டு அதிர்ந்த வருமான வரித்துறை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்குள் நுழைந்தது. அவரது வீட்டில் இருந்து பணம் கொடுத்ததற்கான ஆவணங்களைக் கைப்பற்றினர்.
விசாரணை மட்டும்..
இதன்பேரில் விசாரணைக்கு ஆஜரானாலும் அமைச்சர் மீதான நடவடிக்கைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த ஆவணங்களை வைத்தே, அமைச்சர்கள் அனைவரையும் வளையத்துக்குள் கொண்டு வந்தது வருமான வரித்துறை. இதன் தொடர்ச்சியாக தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திசை மாறுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
ஆர்கே நகர் தேர்தல் வியூகம்
திகார் ஜெயிலுக்குள் தினகரன் சென்றதும், ஆட்சி அதிகாரத்தில் இருந்த காட்சிகளும் மாறின. இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்ற அறிவிப்பு, சசிகலா குடும்பத்துக்குள் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 5 நாட்கள் பரோலில் வந்த சசிகலா குடும்ப உறவினர்களிடம் சமரசத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
தினகரனுக்கு கட்டுப்பாடு
இந்த சமாதான உடன்படிக்கையில் பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கிறது. குறிப்பாக, பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் பொதுக்கூட்ட மேடைகளிலும் தன்னை முன்னிறுத்தி தினகரன் செயல்படக் கூடாது என்பதில் பலரும் ஒரேவித கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
அடக்கமாக இருங்க...
இதனை ஆமோதித்த சசிகலா, ஜெயலலிதா இருந்தபோது, அனைத்து நிர்வாகிகளும் அவருக்கு அடங்கித்தான் இருந்தார்கள். அப்போதுதான் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் இருக்கும். இதற்கு மாறாக, தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற போக்கு இருந்தால் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல எனக் குறிப்பிட்டார். இந்த 5 நாள் பரோல் காலத்தில் குடும்பத்தின் அடுத்த வாரிசுகளை முன்னிறுத்தி சில விஷயங்கள் பேசப்பட்டிருக்கிறது.
புதிய தளபதிகள்
ஜெயா டி.வி நிர்வாகியும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை நடத்தி வரும் விவேக் ஜெயராமன், இளவரசியின் மூத்த மகளும் சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டி வரும் கிருஷ்ணபிரியா, அரசியல் கருத்துக்களை அதிரடியாக வெளியிட்டு வரும் திவாகரன் மகன் ஜெயானந்த் ஆகியோரை முன்னிறுத்தத் தொடங்கியிருக்கிறார் சசிகலா. கட்சியின் வளர்ச்சிக்காக இவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுக்கூட்டமாக இருந்தாலும் கட்சி கூட்டமாக இருந்தாலும் இவர்களின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும். இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பின்னாளில் பார்த்துக் கொள்ளலாம். இவர்களது திறமையை தினகரன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் சசிகலாவின் நோக்கமாக இருந்ததாம்.
தளபதிகளுக்கு பதவி
திருச்சியில் நீட் எதிர்ப்பு போராட்டத்தை தினகரன் நடத்துவதற்கு முன்னரே, சென்னையில் நீட் எதிர்ப்புக் கூட்டத்தைக் காட்டினார் கிருஷ்ணபிரியா. இதற்குப் பின்னணியில் விவேக் இருந்தார். அரசியல் நடவடிக்கைகளிலும் உடைகளிலும் ஜெயலலிதா போலவே காட்டிக் கொள்ள முற்படுகிறார் பிரியா. அவரது அரசியல் ஆசையை சசிகலாவும் உணர்ந்திருக்கிறார். வர்த்தகத்தில் ஈடுபடுவதைக் காட்டிலும் அரசியல் கனவுகளோடு இருக்கிறார் ஜெயானந்த். இதற்கு தந்தை திவாகரனின் ஆசிர்வாதம் இருப்பதால், கட்சி நிர்வாகிகள் மத்தியில் முன்னிலைப்படுத்தப்படுகிறார். அரசியலுக்குள் நேரடியாக வராமல், நடராஜன் போல திரைமறைவு அரசியலில் ஆர்வம் காட்டுகிறார் விவேக். தினகரன் நடத்திய பொதுக்கூட்டங்களின் மேடை வடிவமைப்பு, கூட்டம் சேர்த்தல் உள்பட பல விஷயங்களை அவர்தான் முன்னின்று செயல்படுத்தினார். இவர்கள் மூன்று பேரையும் பயன்படுத்தினால், கட்சிக்குக் கூடுதல் பலம் என்ற பேச்சு எழுந்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பிறகு இந்த மூன்று தளபதிகளுக்கும் உரிய பதவி வந்து சேரலாம் எனவும் கூறப்படுகிறது.