கனவுகளைப் பறி கொடுத்து விட்டு பரப்பன அக்ரஹார சிறைக்கு சசிகலா சென்ற நாள்... பிளாஷ்பேக்!
கனவுகளை பறி கொடுத்துவிட்டு பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறைக்கு சசிகலா சென்ற நாள் இன்றுதான்.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து கனவுகளை பறிகொடுத்துவிட்டு பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்ற நாள் இன்றுதான்.
1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி ஜெயலலிதா சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறை தண்டனை விதித்தார் . இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது.
சுமார் 18 ஆண்டுகளாக ஜெயலலிதா தரப்பால் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி அபராதமும் விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார்.
குமாரசாமி கணக்கு
இந்த தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா உள்பட 4 பேரும், சிறையில் இருந்தவாரே கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்
இந்தத் தீர்ப்பு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்தது. அதனுடன், திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
ஜெ.மரணடைந்தார்
இந்த வழக்கில் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இதனிடையே ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார்.
பொதுச் செயலாளர்
இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் உடனிருந்த சசிகலாதான் கட்சியை கவனித்து கொள்ள வேண்டும் என்று எழுதப்படாத சட்டத்தை முன்னிலைப்படுத்துமாறு தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்ட சசிகலா கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஓபிஎஸ் ராஜினாமா
இதைத் தொடர்ந்து கட்சியும் ஆட்சியும் ஜெயலலிதா கையில் இருந்தது போல் தற்போது சசிகலா கையில் இருக்க வேண்டும் என்று விதண்டாவாதம் செய்து சசியை சட்டசபை குழு தலைவராகவும் தேர்வு செய்தனர். பின்னர் ஓபிஎஸ் ராஜினாமா, ஜெயலலிதா சமாதியில் ஓபிஎஸ் தியானம், கூவத்தூர் கூத்துகள் என்று தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.
முதல்வர் கனவு
இந்த நேரத்தில் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இது முதல்வர் கனவில் இருந்த சசிகலாவுக்கு பேரிடியாக இருந்தது. சாக்கு போக்கு சொல்லி சிறை செல்வதை தவிர்க்கும் முயற்சிகள் நடைபெறலாம் என்பதால் அவகாசம் அளிக்காமல் உடனடியாக பெங்களூர் சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் உடனடியாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சசிகலா தனது முதல்வர் கனவுகளை பறிகொடுத்துவிட்டு கடந்த ஆண்டு இதே நாளில் சிறைக்கு சென்றதை மறக்க முடியுமா என்ன?