விவேக் மூலம் போன் போட்ட சசிகலா... தொடர்பு எல்லைக்கு அப்பால் போன முதல்வர்
சிறையில் இருந்து பரோலில் வந்துள்ள சசிகலா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் போனில் பேச முயற்சி செய்தாராம். ஆனால் அவர் பிடி கொடுக்கவில்லையாம்.
Recommended Video
சென்னை: பரோலில் வெளியே வந்துள்ள சசிகலா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பலமுறை பேச முயற்சி செய்தாராம், ஆனால் அவரோ தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டாராம்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட கணவர் நடராஜனை பார்ப்பதற்காக 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார் சசிகலா. கணவரை இரண்டு முறை பார்த்து வந்து விட்டார். அவர் போகும் இடமெங்கும் கூட்டம் கூடுகிறது.
எந்த ஒரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன்தான் சசிகலாவுக்கு பரோல் கொடுக்கப்பட்டது. ஆனால் கூட்டத்தை கூட்டி மாஸ் காட்டுகிறது தினகரன் தரப்பு.
நெரிசலில் தவித்த சென்னைவாசிகள்
சசிகலா செல்லும் வழியெங்கும் ஆதரவாளர்கள் குவிவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்பும் கூட்டம் கூடியது. இதனை போலீசார் அதிக அளவில் கண்காணித்தனர்.
ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் பேச்சு
சசிகலா சென்னை வந்து சேர்ந்த இரவு இளவரசியின் மகன் விவேக் போனில் தொடர்பு கொண்டு எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சசிகலாவிடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
போனில் பேசியது என்ன?
எடப்பாடி அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூவத்தூர் ரிசார்ட்டில் சத்தியம் வாங்கியதன் அடிப்படையில்தான் அரசுடன் இருப்பதாகவும் எப்போதுமே உங்களுக்குத்தான் நாங்கள் விசுவாசமாக இருப்போம் எனவும் அவர்கள் சசிகலாவிடம் கூறியதாக தெரிகிறது.
அமைச்சர்கள் வருத்தம்
சில அமைச்சர்கள் நேரில் வந்து சந்திக்காததற்கு மன்னிப்பும் கோரியதாகவும் கூறப்படுகிறது. அதை பிரதிபலிக்கும் வகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் செல்லூர் ராஜூ. தினகரனுக்கு எதிராக பேசினாலும் பல அமைச்சர்கள் சசிகலாவிற்கு ஆதரவாகவே உள்ளனர்.
முதல்வரை தொடர்பு கொண்ட விவேக்
சேலத்தில் இருந்த முதல்வர் எடப்பாடியின் உதவியாளர் கோபியின் செல்போனை தொடர்பு கொண்டாராம் இளவரசியின் மகன் விவேக். முதல்வரிடம் சசிகலா பேச வேண்டும் என்றும், போனை அவரிடம் கொடுக்குமாறும் விவேக் கூறியிருக்கிறார்.
பேச மறுத்த ஈபிஎஸ்
தனது போனை கொண்டு போய் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தாராம் உதவியாளர் கோபி, ஆனால் அவர் கையில் வாங்காமல் தவிர்த்துவிட்டாராம். சில நிமிடங்களில் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய் விட்டாராம்.
கண்காணிப்பு வளையத்தில் சசிகலா
சசிகலாவை யார் யார் சந்திக்கிறார்கள் என்று மாநில உளவுத்துறை மூலம் கண்காணிக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதே போல மத்திய உளவுத்துறையும் தீவிரமாக கண்காணிக்கிறது. எனவேதான் சசிகலா உடன் பேசுவதை தவிர்த்து விட்டாராம் முதல்வர் ஈபிஎஸ்.