கட்சியை கபளீகரம் செய்ய ஜெயில விட்டு வெளியே வந்தாகணும் : சசியின் மறுசீராய்வு மனுவின் பின்னணி
அதிமுகவை கபளீகரம் செய்ய ஜெயிலில் இருந்து வெளியே வர வேண்டும் என்று சசிகலா விரும்புவதாகவும் அதன் ஒரு பகுதியாகவே மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : தற்போது ஊசலாட்டத்தில் உள்ள அதிமுகவை தங்கள் வசமாக்க தான் வெளியே வந்தாக வேண்டும் என்று சசிகலா விரும்புவதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று அறிவித்ததையடுத்து, பிப்ரவரி 15ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசியும், ஆண்கள் சிறையில் சுதாகரனும் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட 2 மாதத்தில் சசிலாவை பலர் சந்தித்து செல்வதாக சிறைத்துறை குற்றம்சாட்டியதையடுத்து சசிகலாவை சந்திப்போரின் எண்ணிக்கை குறைந்தது.
ஏப்ரல் மாதத்தில் 3 முறை மட்டுமே சசிகலாவை வெளியட்கள் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பிளவு பட்டு கிடக்கிறது, தினகரனும் சிறை சென்றுவிட்ட நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் குடும்ப ஆதிக்கம் அதிமுகவில் குறைந்து வருவதாக சசிகலா கருதுகிறாராம். கடந்த சில நாட்களாகவே அமைதியாக இருந்த சசி, தனக்கு வழங்கிய தீர்ப்பை மறு சீராய்வு செய்யும்படி உச்சநீதிமன்றத்தில் நேற்று மன தாக்கல் செய்தார்.
தீர்ப்பை மறுசீராய்வு செய்யும்படி தாக்கல் செய்த பின்னணியில், குற்றவாளி என்பதில் எந்த திருத்தமும் செய்யப்படாவிட்டாலும் உடல்நிலையைக் காரணம் காட்டி தண்டனையை குறைக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. மற்றொருபுறம் பெயில் பெறுவதற்கான சட்ட நடைமுறைகளில் மறுசீராய்வு மனு முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே இரண்டில் எது நடந்தாலும் தனக்கு சாதகமாகவே இருக்கும் என்று சசிகலா கருதுகிறாராம்.
தற்போதைய சூழலில் ஜாமீன் கிடைத்தால் அதிமுகவை தங்கள் வசமேவைத்துக் கொள்ள தீவிரமாக செயல்பட முடியும் என்றும் சசி நினைக்கிறாராம். ஆனால் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா என்பது தெரிந்தால் மட்டுமே சசிகலாவின் எண்ணம் நிறைவேறுமா என்பது தெரிய வரும்.