சிறையில் சுயசரிதை எழுதும் சசிகலா... என்ன சொல்லப்போகிறார்?
பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சுயசரிதை எழுதப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வீடியோ கேசட் கடை தொடங்கி அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்தது வரை கூறுவார் என்று தெரியவருகிறது.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகால தண்டனை பெற்று பெங்களூருவில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தனது சுயசரிதையை எழுதப்போகிறாராம். இதற்காக பல குறிப்புகளை எடுத்து வருகிறாராம்.
சசிகலாவின் கதை படமாக எடுத்து வெளியிடப்போவதாக கூறியுள்ள இயக்குநர் ராம் கோபால் வர்மா, பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிடுவேன் என்று கூறி வருகிறார்.
ஆள் ஆளுக்கு மன்னார்குடி குடும்பத்து கதையை எழுதி வருகின்றன. இப்படி தன்னைப்பற்றி பல கற்பனை கதைகள் புனையப்படுவதை சசிகலா விரும்பவில்லையாம் எனவே தன்னுடைய சுய சரிதையை தானே எழுத முடிவு செய்து அதற்கேற்ப சிறு சிறு துணுக்குகளாக எழுத ஆரம்பித்திருக்கிறாராம்.
போயஸ்தோட்ட வீடு
திருத்துரைப்பூண்டியில் பிறந்து மன்னார்குடியில் வளர்ந்து, விளார் கிராமத்தைச் சேர்ந்த நடராஜனை திருமணம் செய்து சென்னை வந்தவர் சசிகலா. அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் நட்பு கிடைக்கவே போயஸ்தோட்டத்து வீட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கிவிட்டார்.
ஜெயலலிதாவின் நிழல்
கடந்த 1984ஆம் ஆண்டு முதல் 2016 டிசம்பர் 5 வரை ஜெயலலிதாவின் நிழலாகவே வலம் வந்தவர் சசிகலா. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
நிறைவேறாத கனவு
முதல்வராகவேண்டும் என்ற சசிகலாவின் கனவு நிறைவேறாமலேயே போய்விட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலாவின் ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் ஒருவர், அரசியலில் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக கூற, அப்போதிருந்தே முதல்வர் கனவில் இருந்தார் சசிகலா. அது நிறைவேறாமலேயே போய்விட்டது.
சிறைவாழ்க்கை
ஜெயலலிதா உடன் போயஸ் தோட்ட இல்லத்தில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்த சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பின்னர் கடந்த 10 நாட்களாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டுள்ளார். சிறைவாழ்க்கை அவருக்கு புதிதில்லை என்றாலும் ஜெயலலிதா இல்லாத சிறை வாழ்க்கை புதிது.
சிறையில் வசதிகள்
சசிகலா கேட்ட பல வசதிகள் கிடைக்காவிட்டாலும் சில வசதிகளை சிறை நிர்வாகம் அளித்துள்ளது. டேபிள், சேர்,கட்டில் மெத்தை, மின்விசிறி, டிவி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. வீட்டு சாப்பாடு சாப்பிட அனுமதியில்லை. சிறையில் கொடுக்கும் சாப்பாடுகளை சாப்பிடவும் முடியவில்லையாம். பல நேரங்களை தனிமையில் கழிக்கும் சசிகலா, அவ்வப்போது இளவரசியுடன் பழைய நினைவுகளை பேசுகிறாராம்.
சுயசரிதை
சேர், டேபிள் இருப்பதால் நோட்டு ஒன்றை வாங்கி சில குறிப்புகளை எடுத்து வருகிறாராம். ஜெயலலிதா உடனான நட்பு, அவரது இன்ப, துன்பங்களில் தனது பங்களிப்பு என எழுதத் தொடங்கி வரும் சசிகலா, இதை சுயசரிதையாக எழுதப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்பை கிளப்புமா?
சிறை வாழ்க்கை அனுபவங்களையும் எழுதப்போகும் சசிகலா, 4 ஆண்டு தண்டனை முடிவதற்குள்ளாக எழுதி முடித்து புத்தகமாக வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலாவின் சுயசரிதை என்ன மாதிரியான பரபரப்பை கிளப்பப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பை இப்போதே ஏற்படுத்தி வருகிறது.