ஆடி அமாவாசை.. பக்தர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்த சதுரகிரி மலை.. நெரிசலில் சிக்கி 2 பேர் பலி!
விருதுநகர் : ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பாதையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கடந்த வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாட்டுடன் தொடங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்வு நேற்று நடத்தது. மலையில் சுயமாக எழுந்தருளிய சுந்தர மகாலிங்கசுவாமி, சித்தர்கள் வழிபட்ட சந்தனமகாலி்ங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு, சிவராத்திரி அலங்காரம் கலைக்கப்பட்டு அமாவாசைக்காக காலையில் சிறப்புஅபிஷேகம் நடந்தது.
பின்னர் சுந்தரமகாலிங்கசுவாமி நாகாபரண அலங்காரத்தில், சந்தனமகாலிங்கசுவாமி ராஜ அலங்காரத்தில், சுந்தரமூர்த்தி சுவாமி புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இம்மூன்று கோயில்களிலும் பாரம்பரிய முறைப்படி சங்கொலி முழங்கி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அமாவாசை வழிபாட்டிற்காக நேற்று இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முக்கிய விழாவாக இருந்ததாலும் விடுமுறை நாளாக இருந்ததாலும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். மலையிலும், அடிவாரத்திலும், மலைப்பாதையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மலைப்பாதையில் குவிந்த பக்தர்கள்
சதுரகிரி மலையில் அமாவாசை நாளில் பக்தர்கள் மலையேறிச் செல்வது பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் மலையேறிச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு அனுமதிக்கப்படுவதாகக் கூறப்பட்ட நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அடிவாரத்தில் குவிந்தனர். போலீசாரால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் மலைப்பாதையில் போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை உடைத்துக் கொண்டு பக்தர்கள் மலையேறத் தொடங்கினர்.

கூட்ட நெரிசல்
மலைப்பாதைக்குள் 15 நிமிடத்திற்கு ஆயிரம் பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்பட்டனர். மாங்கேன ஓடையிலிருந்து தொடங்கி மலைப்பாதை முழுவதும் மக்கள் தலைகளாகவே காண்ணப்பட்டது. ஒவ்வொரு இடத்தையும் கடந்து செல்லவே 6 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. பக்தர்கள் கூட்ட நெரிசலிலும், கடும் வெயிலிலும் சிக்கி மயக்கமடைந்தனர்.

மூச்சுத் திணறல்
இதனிடையே சிவகாசியை சேர்ந்த 40 வயது ரவிக்குமார் உறவினர்கள், நண்பர்களுடன் மலைக்கு சென்றார். சுந்தரமூர்த்தி சுவாமி கோயில் அருகே வந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மருத்துவக்குழுவினர் அவருக்கு முதலுதவிசெய்தனர் எனினும் சிகிச்சை பலனின்றி அவர் அங்கேயே இறந்தார்.

பக்தர் உயிரிழப்பு
இதே போன்ற வேலுார், கொசப்பேட்டையை சேர்ந்த 63 வயது கிருஷ்ணமூர்த்தி, உறவினர்களுடன் சதுரகிரி மலைக்கு வந்துள்ளனர். காலையில் மலையேறத் துவங்கியவர் கூட்ட நெரிசல் காரணமாக ஆங்காங்கே இளைப்பாறியபடி மலையேறினார். மாலையில் கோணத்தலைவாசல் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். அவருடன் வந்தவர்கள் முதலுதவி செய்தனர். மருத்துவக்குழுவினர் வருவதற்குள் அவர் உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications