கர்நாடகா, உத்தரகாண்ட் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்குகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சொல்வது என்ன?
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்குகளில் 2 முக்கிய தீர்ப்புகள் விவாதப் பொருளாகி இருக்கின்றன.
Recommended Video
சென்னை: தினகரன் ஆதரவு 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு எப்படி வரும் என்பதை முன்வைத்து விவாதங்கள் களைகட்டியுள்ளன. கர்நாடகா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளும் இப்போது இந்த விவாதத்தில் கை கோர்த்துள்ளன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். இதையடுத்து 18 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
கடந்த 9 மாதங்களாக இந்த 18 பேரும் எம்.எல்.ஏக்களாக இல்லை. சபாநாயகர் தனபாலின் உத்தரவுக்கு எதிராக 18 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இது தொடர்பான விவாதங்களில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளும் பேசுபொருளாகி இருக்கின்றன. குறிப்பாக கர்நாடகா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை அனைத்து தரப்பும் சுட்டிக் காட்டுகின்றன.
கர்நாடகா எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்
கர்நாடகாவில் 2010-ம் ஆண்டு முதல்வராக இருந்தார் பாஜகவின் எடியூரப்பா. அப்போது முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக 11 பாஜக எம்.எல்.ஏக்களும் 5 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த 16 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகராக இருந்த போபையா தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் சரியே என தீர்ப்பளிக்கப்பட்டது.
விளாசிய உச்சநீதிமன்றம்
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது அளிக்கப்பட்ட தீர்ப்பில், சபாநாயகர் போபையாவின் முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. முதல்வர் எடியூரப்பா அரசைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமே சபாநாயகர் இந்த தகுதி நீக்க அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தவிர தகுதி நீக்கத்துக்கு எந்த ஒரு காரணமும் இல்லை. எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என அதிரடியாக தீர்ப்பளித்தனர்.
தினகரன் அணி மனு விவரம்
இத்தீர்ப்பை முன்வைத்தே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி ஆளுநரிடம் மனு அளித்தனர். அதுவும் எடியூரப்பாவுக்கு எதிராக அம்மாநில ஆளுநரிடம் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் என்ன மனு அளித்தார்களோ அதே வாசகங்களைக் கொண்டே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற கோரினர். இந்த வழக்கின் தீர்ப்பை முன்வைத்தே தங்களது எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் செல்லாது என நம்பிக்கையோடு 18 எம்.எல்.ஏக்களும் இருந்து வருகின்றனர்.
உத்தரகாண்ட்டில் வேறு தீர்ப்பு
இதே நேரத்தில் உத்தரகாண்ட் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு ஒன்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹரீஷ் ராவத்தை மாற்றக் கோரி 9 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இக்கோரிக்கையை வலியுறுத்தி அம்மாநில ஆளுநரிடமும் மனு அளித்தனர். இதனால் 9 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது. ஏனெனில் 9 எம்.எல்.ஏக்களும் எதிர்க்கட்சியான பாஜக எம்.எல்.ஏக்களுடன் ஆளுநரை சென்று மனு அளித்ததாக காங்கிரஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதேபோல் மேல்முறையீட்டு வழக்கிலும் 9 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தற்போது இந்த இரு தீர்ப்புகளும்தான் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வழக்கு விவகாரத்தில் விவாதப் பொருளாக இடம்பெற்றுள்ளன.