எங்க வீட்டில் மழை தண்ணிதாங்க எல்லாத்துக்கும்.. 2 மழை பெஞ்சா போதும்.. அசத்தும் அருணன்
மழைநீர் சேகரிப்பு பற்றி பள்ளி ஆசிரியர் அருணன் புது விளக்கம் அளித்துள்ளார்
Recommended Video
கும்பகோணம்: "எங்க வீட்டில் மழை தண்ணிதாங்க எல்லாத்துக்கும்.. அதிலதான் குடிக்கிறோம், சமைக்கிறோம்.. வருஷத்துக்கு 2 முறை 2 மணி நேரம் மழை பெய்தால் போதுங்க.. நமக்கு தண்ணி பஞ்சமே வராது" என்று அடித்து சொல்கிறார் வாத்தியார் அருணன்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.
ரயில் மற்றும் டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பதற்காக தமிழக அரசு முயன்று வருகிறது. இதற்காக பல கோடி ரூபாய் செலவழித்தும் உள்ளது. எனினும் தண்ணீர் பற்றாக்குறையை முழுவதுமாக போகவில்லை.
அரசு பள்ளி
இந்நிலையில், கும்பகோணம் அருகே அருணன் என்ற வாத்தியார் மழைநீர் சேகரிப்பு பற்றி புது வழிமுறையை சொல்கிறார். முத்தையபிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் அருணன். அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
ஃபைபர் டேங்க்
இவர் சொல்லும்போது, "மழை நீர்தான் என் குடும்பத்திற்கு சமைப்பதற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்துகிறோம். எப்படின்னா, மழை நீரை சேமிப்பதற்காக என் வீட்டின் மேல் பகுதியில் முழுவதும் தகர ஷீட் அமைத்துள்ளேன். அதனால் மழை நீர் ஒரு சொட்டுகூட வீணாகாமல் குழாய் மூலம் கொண்டுவரப்பட்டு, ஃபைபர் டேங்க்கில் விழுமாறு செய்துள்ளேன்.
சுத்த நீர்
இந்த பைபர் டேங்க்கின் மேல் பகுதியில் பெருமணல், அதன் கீழ் கூழாங்கற்கள், அதற்கு கீழ், நிலக்கரியையும் போட்டு, தண்ணீரை சுத்தம் செய்கிறேன். ஏனெனில் முதலில் பத்து நிமிடம் தண்ணீர் அசுத்தமாக இருக்கும் என்பதால், அந்த தண்ணீரை நிலத்தடிக்கு விடப்படுகிறது.
சேமிப்பு
ஒரு மணி நேரம் மழை பெய்தால் போதும். எங்களுக்கு 2 ஆயிரத்து 500 லிட்டர் தூய்மையான தண்ணீர் கிடைக்கிறது. அந்த தண்ணீரை எங்கள் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 டேங்குகளில் சேமித்து 6 முதல் 8 மாதங்கள் வரை பயன்படுத்துகிறோம்.
2 மணி நேரம்
இப்படி 2 ஆயிரத்து 500 லிட்டர் தண்ணீரை எனது குடும்பத்தில் உள்ள 4 பேரும் தண்ணீர் குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகிறோம். அதனால் எங்களுக்கு வருஷத்துக்கு இரு முறை 2 மணி நேரம் மழை பெய்தால் போதும். சுத்தமான சுகாதாரமான தண்ணீரை வருஷம் முழுவதும் சேமித்து வைத்திருப்போம்.
சுத்த நீர்
இந்த தண்ணீரால், எங்களுக்கு எந்தவிதமான நோய்கள் வருவதும் தடுக்கப்படுகிறது. இந்த தண்ணீரை நாங்கள் ஆய்வக பரிசோதனை செய்ததில் மிக சுத்தமான குடிநீர் என்று சான்று அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை எல்லாருமே பயன்படுத்தினால் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு முற்றிலும் குறையும். சுகாதாரமான நீரை பெறமுடியும்.
கோரிக்கை
சாமானிய மக்கள் இவ்வளவு பணம் செலவழித்து இது போன்ற திட்டங்களை செயல்படுத்த முடியாது. அதனால் அரசு இந்த திட்டத்தை அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் அல்லது இதற்காக பன்படுத்தப்படும் பொருட்களை மானிய விலையில் குறைவாக அளிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கிறார் அருணன்.