கருப்பு பெட்டி செயலிழந்து விட்டதா? மாயமான ஏஎன்-32 ரக விமானத்தை தேடும் பணியில் பின்னடைவு
சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் புறப்பட்ட ஏஎன் 32 ரக விமானம் மாயமாகி ஒரு மாதம் ஆன நிலையில், விமானத்தின் கருப்பு பெட்டி செயலிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு கடந்த மாதம் 22-ந் தேதி புறப்பட்ட ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் சிறிது நேரத்திலேயே ரேடார் கட்டுப்பாட்டில் இருந்து மாயமானது.
அந்த விமானம் வங்கக்கடலில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக ஆராய்ச்சி கப்பல்கள், போர் கப்பல்கள், போர் விமானங்கள் மூலம் மாயமான விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் விமானம் மாயமான இடத்தில் கடலுக்கு அடியில் 3½ கிலோ மீட்டர் ஆழத்தில் மர்ம பொருட்கள் கிடப்பதாக தெரியவந்துள்ளது. அவை மாயமான விமானத்தின் பாகங்களா என அதை மீட்டு ஆய்வு நடத்திய பின்னரே தெரியவரும் என்ற நிலையில், நவீன கருவி உதவியுடன் அந்த பொருளை கடலுக்கு அடியில் இருந்து எடுக்கும் பணி தொடங்கியது.
விமானத்தில் உள்ள கருப்பு பெட்டி கிடைத்தால், கடைசி நேரத்தில் விமானியின் உரையாடல் உள்ளிட்ட தகவல்களை பெற முடியும். இதனால், கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்தது. விமானம் மாயமாகி ஒரு மாதம் ஆன நிலையில், கருப்பு பெட்டி செயலிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாயமான விமானத்தை தேடும் பணியிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விஞ்ஞானி டி.ஜெயபிரபு கூறியதாவது: ராணுவ விமானம், பயணிகள் விமானம் உள்ளிட்ட அனைத்து ரக விமானங்களிலும் உள்ள கருப்பு பெட்டியில், விபத்தின் போது விமானியின் கடைசி நேர உரையாடல் உள்ளிட்ட பல தகவல்கள் அதில் பதிவாகியிருக்கும். கருப்பு பெட்டியில் பதிவான தகவல்களைக் கொண்டு விமான விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும். விமானம் விபத்துக்கு உள்ளான ஒரு மாதம் வரை கருப்பு பெட்டியில் இருந்து தகவல்களை பெறமுடியும். அதன் பிறகு கருப்பு பெட்டி செயல் இழந்து விடும்.
30 நாளுக்கு பிறகு ஒவ்வொரு நாளும் அதில் இருந்து பெறப்படும் தகவல்கள் குறைந்து கொண்டே இருக்கும். எனினும் அதிநவீன ரக கப்பல்களில் உள்ள அதிர்வுகளை வெளிப்படுத்தும் கருவிகள் மூலம் தேடும் பணி நடந்துவருவதால், முன்னேற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினாரர்.