3 நாட்களாக "உட்டாலக்கடி கிரி கிரி சைதாப்பேட்டை வடைகறி" ஆட்டம் காட்டிய ஏர்போர்ட் குரங்கு!
சென்னை: சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு 3 நாட்களாக ஆட்டம் காட்டிய ஆண் குரங்கு ஒருவழியாக பிடிபட்டது.
குரங்கை பிடிக்க கூண்டில் பழம் வைத்தால் தந்திரமாக வெளியே இருந்து அந்தப் பழங்களை மட்டும் சாப்பிட்டுவிட்டு ஓடியது.
சரி பெண் குரங்கை பார்த்து ஜொள்ளுவிட்டு வந்து கூண்டில் சிக்கும் என்று நினைத்து ஒரு பெண் குரங்கையும் கொண்டு வந்து வைத்தனர். ஆனால் உட்டாலக்கடியாக, அந்த பெண் குரங்கே கூண்டில் இருந்த பழங்களை வெளியே தூக்கிப்போட்டு ஆண் குரங்கை பாதுகாத்தது.
களை கட்டிய ஏர்போர்ட்:
இப்படி அதிகாரிகளை அலைக்கழித்து ஆட்டம்காட்டி கடைசியில் மாட்டிய குரங்கால் ஏர்போர்ட்டே களைகட்டியது. சென்னை விமான நிலையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 30 ஆம் தேதி வரை 7 அடுக்கு பாதுகாப்பு அமலில் உள்ளது.
சோதனைக்குப் பின் அனுமதி:
மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும் கடுமையான சோதனைக்கு பின் அனுமதிக்கின்றனர்.
உள் நுழைந்த குரங்குகள்:
இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் விமான நிலையத்தில் நுழைந்த 2 குரங்குகள் விமானம் புறப்படும் பகுதியில் பயணிகள் பாதுகாப்பு சோதனை நடத்தும் இடத்துக்கு தாவி சென்றது.
குரங்குகளை பிடிக்க உத்தரவு:
இதை பார்த்ததும் பயணிகள் அலறியடித்து ஓடினர். அங்கு வந்த விமான நிலைய அதிகாரிகள் அந்த குரங்குகளை பிடிக்க மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டனர்.
இதுல இது வேற:
ஆனால் அந்த குரங்குகள் 50 அடி உயரமுள்ள மேற்கூரை மீது ஏறி கொண்டன. இதனால் அவற்றை பிடிக்க முடியாமல் வீரர்கள் தவித்தனர். ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை கண்ணாடி சுவர்கள் கதவுகள் என 32 முறை உடைந்து விபத்து நடந்துள்ளது.
அச்சத்தில் பயணிகள்:
இதனால் குரங்குகளின் சேட்டை யால் மீண்டும் உடைந்து விழும் சம்பவம் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் பயணிகளும் விமான நிலைய அதிகாரிகளும் ஊழியர்களும் இருந்தனர்.
பிடிபட்ட பெண் குரங்கு:
விமான நிலைய தீயணைப்பு படை வீரர்கள் வேளச்சேரியில் உள்ள வனத்துறையினர் வந்து நீண்ட நேரம் போராடி மாலை 6 மணியளவில் ஒரு குரங்கை பிடித்தனர். அது பெண் குரங்கு என தெரிந்தது. அதனுடன் இருந்த மற்றொரு குரங்கு தப்பிவிட்டது.
குரங்கை பிடிக்க ஆய்வு:
ஆனால் தப்பிய குரங்கு விமான நிலையத்தை சுற்றிக் கொண்டே இருந்தது. இதையடுத்து திங்கட்கிழமை காலை வேளச்சேரி வனஉயிரின பாதுகாப்பு அதிகாரி டேவிட்ராஜ் தலைமையில் 6 பேர் குழுவினர் விமான நிலையம் வந்தனர். அந்த குரங்கை பிடிப்பது குறித்து ஆய்வு செய்தனர்.
பழம் வச்சு பிடிக்க சதி:
ஆண் குரங்கை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டது. பின்னர் அதில் பழம் மற்றும் உணவு பொருட்கள் வைக்கப்பட்டன. ஆனால் கூண்டின் அருகே வந்த குரங்கு வெளியில் இருந்தபடியே கூண்டில் இருந்த உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு சென்றது.
பெண் குரங்கின் தந்திரம்:
இதையடுத்து பெண் குரங்கை பார்த்ததும் ஆண் குரங்கு கூண்டுக்கு உள்ளே வந்து மாட்டிக் கொள்ளும் என்று அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர். இதனால் அன்று மாலையில் 6 மாத குட்டி பெண் குரங்கை கொண்டு வந்து அந்த கூண்டில் அடைத்தனர்.
அதிகாரிகளுக்கு அதிர்ச்சி:
அதற்கு தேவையான பழம் வேர்க்கடலை மற்றும் உணவு பொருட் களை வைத்தனர். பெண் குரங்கை பார்த்ததும் கூண்டுக்குள் வந்து அதனுடன் சேர்ந்து பழங்களை சாப்பிடும் என்று நினைத்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது.
உணவு பொருட்கள் வீசிய சம்பவம்:
காரணம் கூண்டுக்குள் இருந்த பெண் குரங்கு வெளியே அட்டகாசம் செய்து கொண்டிருந்த ஆண் குரங்குக்கு உதவி செய்ததுதான். அதாவது கூண்டுக்கு அருகே வந்த ஆண் குரங்கை உள்ளே செல்லாமல் பார்த்தபடியே நின்றது.
கண்ணாமூச்சி விளையாட்டு:
அப்போது கூண்டுக்குள் இருந்த பெண் குரங்கு தன் அருகில் இருந்த உணவு பொருட்களை தூக்கி கூண்டுக்கு வெளியே வீசியது. அதை சாப்பிட்ட ஆண் குரங்கு மீண்டும் தப்பியோடி அதிகாரிகளுக்கு கண்ணாமூச்சி விளையாட்டு காட்டியது.
பெண் குரங்குக்கு செக்:
கூண்டில் அடைக்கப்பட்ட பெண் குரங்கு ஆண் குரங்குக்கு உதவி செய்ததை பார்த்த அதிகாரிகள் எரிச்சல் அடைந்தனர். எனவே நேற்று கூண்டில் உள்ள பெண் குரங்குக்கு உணவு கொடுக்காமல் இருந்தனர். இதனால் அந்த குரங்கும் பலமுறை கூண்டிற்குள்ளேயே அங்கும் இங்கும் எகிறியது.
கொஞ்ச வந்தபோது சிக்கியது:
பெண் குரங்கு கூண்டுக்கு அருகில் மதியம் 2 மணியளவில் உணவு தேடி ஆண் குரங்கு வந்தது. ஆனால் பெண் குரங்கு பழத்தை வெளியே வீசவில்லை. எனவே பெண் குரங்கிடம் கொஞ்சுவதற்காக கூண்டின் உள்ளே நுழைந்தது. உடனே தானியங்கி கூண்டு மூடிக்கொண்டது.
நிம்மதிப் பெருமூச்சு:
இதை பார்த்த வன குழுவினர் அந்த குரங்கை பிடித்து வேளச்சேரி வன உயிரின காப்பகத்துக்கு கொண்டு சென்றனர். 3 நாட்கள் பயணிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்திய குரங்கு பிடிபட்டதால் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.