விநாயகர் சிலைகள் நாளை கரைப்பு- பலத்த போலீஸ் பாதுகாப்பு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள சிலைகள் நாளை கரைக்கப்படுகின்றன.
நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை ஓட்டி கடந்த 17 ஆம் தேதி விநாயகர் சிலைகள பிரதிஷ்டை செய்யப்பட்டன. நெல்லை மாநகரில் 56 விநாயகர் சிலைகள், மாவட்டத்தில் 350 சிலைகள் உள்பட 400க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப்பட்டன. 3 அடி முதல் 10 அடி வரை உள்ள விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு தினமும் காலை மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நெல்லை டவுன் பட்டாபத்து குமரன் தெருவில் போலீசார் தடையை மீறி விநாயகர் சிலையை வைக்க முயன்ற இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலையை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். அவர்கள் இரவில் விடுவிக்கப்பட்டனர். அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் கோபாலசமுத்திரம் சந்தனமாரியம்மன் கோவில் முன்பு வைக்கப்பட்ட விநாயகர் சிலையை போலீசார் கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தொடர்ந்து கரைக்கரப்பட்டு வருகின்றன. எஞ்சிய சிலைகள் நாளை மொத்தமாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கரைக்கப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு போலீசார் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளனர். சர்ச்சைக்குரிய தெருக்கள் வழியாக ஊர்வலம் செல்ல கூடாது, போலீசார் குறிப்பிட்ட பகுதிகள் வழியாகதான் ஊர்வலம் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக குறிச்சியில் வைக்கப்பட்ட 11 அடி விநாயகர் சிலை மேலப்பாளையம் தெருக்கள் வழியாக எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது போல் பேட்டையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் முஸ்லீம் தெருக்கள் வழியாக செல்ல கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications