நக்சலைட் தாக்குதல் எதிரொலி: தமிழக-கேரள எல்லையில் போலீசார் தீவிர சோதனை
செங்கோட்டை: தமிழக-கேரள எல்லையில் கேரளா போலீசாரும், வனத்துறையினரும் தீவீர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் அந்நியநாட்டு நிறுவனங்களை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்ற கோஷத்துடன் வந்த நக்சலைட் கும்பல் கேரள மாநிலம் பாலக்காட்டிலுள்ள கேஎப்சி மற்றும் மெக்டொனால்டு ஆகிய பன்னாட்டு உணவகங்களை அடித்து நொறுக்கியது.
கேரளாவில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், பாலக்காடு நகருக்குள்ளேயே நக்சலைட்டுகள் தங்களின் ஆதரவாளர்கள் சகிதம் புகுந்து நடத்திய தாக்குதல் அம்மாநிலத்தையே அதிர்சிக்குள்ளக்கியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக-கேரள எல்லைப் பகுதியான நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் புளியரை கோட்டைவாசல் வரை தமிழக எல்லை உள்ளது.
அதன் தொடர்ச்சியாக ஆரியங்காவு முதல் மேற்குத் தொடர்ச்சிமலை "திக்" பாரஸ்ட்(அடர்ந்த வனம்) பகுதியாக உள்ளது. இந்தப் பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் இங்கு தீவீரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு நக்சலைட்டுகள் முயற்சி மேற்கொள்ள வாய்ப்புக்கள் உள்ளதால் கேரளா காவல்துறையும், வனத்துறையும் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளன.
நேற்று கொல்லம் மாவட்ட புறநகர் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேந்திரன் தலைமையில் வனத்துறை அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கோட்டைவாசல் வனப்பகுதியில் ஆய்வு மேற்க்கொண்டனர். தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்கள் மட்டுமல்லாது மலை வழிப் பாதைகளையும் வனத்துறையும், காவல்துறையும் இணைந்து தீவிரமாக கண்காணிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் ஐயப்பபக்தர்கள் வேடத்தில் நக்சலைட் கும்பல் கேரளாவுக்குள் ஊடுருவி விடக்கூடாது என்பதாலும் தீவீர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.