2500 வருஷத்துக்கு முன்னாடியே "டாய்லெட்" கட்டிட்டான் தமிழன்.. சீமான் பெருமிதம்
மதுரை: தூய்மை பாரதம் பற்றி இன்று பேசுகிறார்கள். கழிப்பறை குறித்து மாய்ந்து மாய்ந்து பேசுகிறார்கள். ஆனால் 2500 வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் கழிப்பறையைக் கட்டி விட்டார்கள். கீழடி இன்று அதை உலகுக்கே எடுத்துக் காட்டி நிற்கிறது என்று பெருமிதம் வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் தலைவர் சீமான்.
மதுரை கீழடியில் தனியார் நிலத்தில் நடந்த அகழாய்வுப் பணியின்போது மிகப் பெரிய நாகரீகம் புதைந்து கிடப்பது வெளிச்சத்திற்கு வந்தது. தொல் தமிழர்களின் வாழ்க்கை முறை, நகரமைப்புத் திட்டம்,நாகரீகம் என பல ஆச்சரியமளிக்கும் விஷயங்கள் வெளியில் வந்தன.
தற்போது இங்கு கிடைத்த பொருட்களை மைசூருக்குக் கொண்டு தொல் பொருள் துறை முடிவு செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கீழடிக்கு நேற்று வந்த சீமான் அங்கு நடந்த அகழ்வாய்வுப் பணிகளைப் பற்றி கேட்டறிந்தார். மேலும் அந்த இடத்தையும் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
தமிழர்களின் நாகரீக வாழ்வியலின் சாட்சி
சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற தமிழரின் நாகரிக வாழ்வியலின் சாட்சியான தொல்பொருட்களைப் பார்க்கும்போது பிரமிப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இந்த வட்டாரம் முழுவதும் ஆய்வு செய்தால் தமிழர்களின் பண்டைய நாகரிக வாழ்வியலைப் பற்றிய தடயங்களைச் சேகரிக்கலாம்.
பொருட்களைப் பாதுகாக்க நடவடிக்கை இல்லை
இரண்டு வருடங்களாக இங்கு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்திப் பாதுகாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழரின் பெருமையைப் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் கேட்கும் நிலையில்தான் அரசாங்கத்தின் நிலை உள்ளது. தற்போது நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை தொடர வேண்டும்.
விலைக்கு வாங்கி அருங்காட்சியகம் அமைக்கலாம்
இந்த தனியார் இடத்தை விலை கொடுத்து வாங்கி தொல்பொருள் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். இங்கேயே அருங்காட்சியகம் அமைத்து, பராமரித்து தமிழக மக்களிடமும், மாணவர்களிடமும் இதன் பெருமைகளை எடுத்துச்சொல்ல அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதானிக்கு இடம் தரும்போது, தமிழர்களுக்கு தர முடியாதா?
அதானிக்கு ஐயாயிரம் ஏக்கர் இடம் வேண்டுமென்றால், உடனே வாங்கிக்கொடுக்கும் அரசு, தமிழரின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள சில ஏக்கர்களை வாங்கிக் கொடுக்க முடியாதா?
அப்பவே கழிப்பறை கட்டியவன் தமிழன்
கழிப்பறை உபயோகிப்பதைப் பற்றி மத்திய அரசு இபோதுதான் விளம்பரம் செய்கிறது. ஆனால், நம் முன்னோர்கள் 2,500 வருடங்களுக்கு முன்பே கழிப்பறை வசதியுடன் நாகரிகமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை கீழடியில் காண முடிகிறது.
எங்கும் கொண்டு செல்லக் கூடாது
தமிழரின் பண்டைய வீரமும், பெருமையும், வரலாறும், ஆவணங்களும் அழிக்கப்பட்டு வரும் சூழலில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லக் கூடாது. மீறிக் கொண்டு செல்ல முயன்றால் நாம் தமிழர் கட்சி போராடும் என்றார் சீமான்.