எக்காரணம் கொண்டும் ஓ.பி.எஸ்.,க்கு முதல்வர் பதவி தரக்கூடாது.. புகழேந்தி கொந்தளிப்பு
ஓ. பன்னீர் செல்வத்துக்கு மீண்டும் முதல்வர் பதவி தரக்கூடாது என்று கர்நாடக அதிமுக அம்மா செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு முதல்வர் பதவி கொடுக்க கூடாது என்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக தொடரவேண்டும் என்றும் கர்நாடக அதிமுக அம்மா செயலாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. அதன்பின்னர் நாளுக்கு நாள் அதிமுகவில் பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
அதிமுகவில் இருந்து தினகரன் குடும்பம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த பின்னர் தமிழக அரசியலில் மேலும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இந்நிலையில் சென்னை அடையாறில் தினகரனை சந்தித்த பின் கர்நாடக அதிமுக அம்மா செயலாளர் புகழேந்தி செய்தியார்களிடம் கூறுகையில், எக்காரணம் கொண்டும் ஓபிஎஸ்க்கு மீண்டும் முதல்வர் பதவி தரக்கூடாது. தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக தொடரவேண்டும்.
தினகரனை விலக்கியதால் மனம் புண்பட்டாலும் அவரது செயல் உயர்வாக உள்ளது. சசிகலா குடும்பத்தை பற்றி தம்பிதுரை பேசுவது ஏற்புடையதல்ல. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை விட்டுக்கொடுக்க கூடாது. கட்சி நலன் கருதி தினகரன் பதவியை விட்டுக்கொடுத்ததை அனைவரும் பாராட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.