சிறுவாணி தண்ணீரை தடுப்பதா? கேரளாவை கண்டித்து போராட்டம்: சீமான்
திருநெல்வேலி: அண்டை மாநிலங்கள் தமிழகத்தை இழிவாக நினைக்கிறார்கள். தமிழகத்திற்கு வரக்கூடிய சிறுவாணி தண்ணீரை கேரளா அடைத்துள்ளது. இதனை கண்டித்து வருகிற 24-ந்தேதி கோவையில் போராட்டம் நடத்தவுள்ளோம் என்று நாம் தமிழர்கட்சியின் நிறுவனர் தலைவர் சீமான் கூறியுள்ளார். இலங்கையை சிங்கள தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் சீமான் இன்று நெல்லை வந்தார். அவர் சிந்துபூந்துறை சாலை தெருவில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருகிறார்கள். மத்திய அரசு பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ராஜபக்சே நல்லெண்ண அடிப்படையில் மீனவர்களை விடுதலை செய்ததாக கூறுகிறார்.
மீனவர்களை கைது செய்யும்போது அவருக்கு எந்த எண்ணம் இருந்தது. விமானங்களை கடத்தும் தலீபான் தீவிரவாதிகள் மிரட்டுவது போல உள்நாட்டு மக்களை சிறைபிடித்து இலங்கை இந்தியாவை மிரட்டுகிறது. எனவே இலங்கையை சிங்கள தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும்.
இலங்கை தமிழர்களை தாக்கி வந்த சிங்களர்கள் தற்போது இஸ்லாமியர்களையும் தாக்க தொடங்கியுள்ளனர். இலங்கையில் தமிழ் இனத்தையே ஒழிக்க நினைக்கிறார்கள்.
இலங்கை ஜனநாயக நாடு என்று கூறுபவர்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இடது சாரி கட்சியினர் சிந்திக்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு தமிழர்கள் நலனில் சிறப்பாக செயல்படும் என எண்ணுகிறோம்.
அண்டை மாநிலங்கள் தமிழகத்தை இழிவாக நினைக்கிறார்கள். தமிழகத்திற்கு வரக்கூடிய சிறுவாணி தண்ணீரை கேரளா அடைத்துள்ளது. இதனை கண்டித்து வருகிற 24-ந்தேதி கோவையில் போராட்டம் நடத்தவுள்ளோம் என்று சீமான் கூறியுள்ளார்.