வீட்டுக்குள் வெள்ளம்!... ஹால், கிச்சனில் சுற்றும் மீன்கள், பாம்புகள்!!
சென்னை: வீடுகளில் மீன் தொட்டி வைத்து மீன் வளர்பார்கள்... ஆனால் மழை வெள்ளத்தினால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்திருக்க... அந்த தண்ணீரில் மீன் வளர்க்கின்றனர். அதனை வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கின்றனர் சிலர்.
மழை தண்ணீர் வீடுகளில் புகுந்துவிட அதில் பாம்பும், விஷ ஜந்துகளும் அழையா விருந்தாளிகளாக குடியேற அவற்றுடனேயே வாழ பழகிக்கொண்டனர் பெரும்பாலான சென்னைவாசிகள். சமையல் அறையில் முழங்கால் அளவு தண்ணீர் இருந்தாலும் வேறு வழியின்றி அதில் நின்றுதான் சமைக்க வேண்டியிருக்கிறது. சேர்களில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு... வீட்டு முன்பாக வரும் போட்டில் ஏறி அலுவலகம் செல்கிறோம் என்று மழைக்கால சங்கடங்களைக்கூட சந்தோசமாக பகிர்ந்து கொள்கின்றனர் தோழிகள்.
ஆசை ஆசையாக பார்த்து வாங்கிய வீடு... மழை, வெள்ளத்திற்காக அதை விட்டு எப்படி வெளியேறுவது என்று கேட்கின்றனர் சிலர். அதனால்தான் சங்கடங்கள் வந்தாலும் சந்தோசத்தோடு வாழ்கிறோம் என்றும் கூறுகின்றனர்.
Chennai fish farming in home ..அம்மா மீன் வளர்க்கும் திட்டம்........
Posted by Kumararaja Ezhilarassi on Saturday, November 21, 2015
அம்மா மீன் வளர்ப்பு திட்டம்
மழை நீரில் மீன்கள் வளர ஆரம்பித்து விட்டன. அவை வீட்டு ஹால் முழுவதும் சுற்றிவர அதை ஆசையோடு வீடியோ எடுத்து பகிர்ந்து கொண்டுள்ளார் ஒருவர். அம்மா மீன் வளர்ப்புத்திட்டமாம்.
பாம்பு வருதா?
பாம்பு வருதுங்க... விஷ பூச்சி எல்லாம் வருதுங்க... ஆனாலும் எங்க போறதுன்னு தெரியலை...கரண்ட் இல்லை இருட்டுலையும் இங்கேதான் இருக்கோம் என்று பலரும் செய்தி சேனல்களில் பேட்டி கொடுக்கின்றனர். வீடுகளுக்குள் பாம்பு புகுந்து விட்டால் உடனடியாக 044- 22200335 என்ற ஹெல்ப்லைன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.மீட்பு படையினர் உங்களை காக்க எந்நேரமும் தயார் நிலையில் இருக்கின்றனராம்.
மக்கள் செய்யவேண்டியது என்ன?
வீட்டுக்குள் பாம்பு புகுந்தால் அதனை அடித்துக் கொல்வதை தவிர்க்க வேண்டும். பாம்பு புகுந்துள்ள அறையை விட்டு உடனடியாக குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் ஆகியோரை வெளியேற்ற வேண்டும்.
ஹெல்மெட் கவனம்
மழையில் சிக்கிய வாகனங்களின் சக்கரங்களில் பாம்புகள் சுற்றிக்கொண்டிருக்கலாம். எனவே, அப்படியான தருணங்களில் வாகனத்தை நன்கு சோதனை செய்த பிறகே ஓட்ட வேண்டும். ஹெல்மெட்டின் உள்பகுதியில் தேள் போன்றவை அண்டுவதற்கு வாய்ப்பு உள்ளது.எனவே ஹெல்மெட்டை உறையிட்டு மூடி வைக்க வேண்டும். அணியும்போதும் பூச்சிகள், தேள் போன்றவை இருக்கிறதா என சோதித்து அணியவேண்டும்.
பாம்பு பிடிக்கலையோ பாம்பு
சென்னை வேளச்சேரி வண்டலூர், ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், புழல் பகுதிகளில் ஏராளமான வீடுகளில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. இதன் காரணமாக எங்கும் வெள்ளக்காடாக கிடப்பதால் காடுகளில் பொந்துகளில் வசிக்கும் பாம்புகள் வீடுகளை நோக்கி படை எடுத்து வருகின்றன.
இதன் காரணமாக வீடுகளுக்குள் பாம்பை பார்த்தவர்கள் வனத்துறைக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கிறார்கள். அவர்கள் வந்து பாம்பை பிடித்து செல்கிறார்களாம்.
மழை வெள்ளம் இன்னும் என்னென்ன அனுபவங்களை சென்னைவாசிகளுக்கு கற்றுத்தரப் போகிறதோ தெரியலையே!