போர்க்கால நடவடிக்கை மூலம் தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்!: எஸ்.டி.பி.ஐ கோரிக்கை
சென்னை: தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காணவேண்டும் என்று மத்திய அரசுக்கு எஸ்.டி.பி.ஐ கோரிக்கை விடுத்துள்ளது.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம், ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைமையகத்தில் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எ.சயீத் தலைமையில் நடைபெற்ற இச்செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய பிரச்சனைகள் குறித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வளர்ச்சி குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இச்செயற்குழுவில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை பின்வருமாறு :
இன்றைய அரசியல் சூழ்நிலையில் மதசார்பற்ற சக்திகள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஆகவே மதசார்பற்ற சக்திகள் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என்பதை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
மேலும் மதசார்பற்ற சக்திகள் தங்களுக்கிடையே போட்டிபோட்டுக் கொண்டு தேர்தலை சந்தித்ததே பாஜக வெற்றிக்கு துணையாக அமைந்துவிட்டது என இச்செயற்குழு கருதுகிறது.
அண்டை நாடுகளுடனான உறவை பலப்படுத்தும் விதத்தில் பாஜக அரசு மேற்க்கொண்ட முயற்சிகளை இச்செயற்குழு வரவேற்கிறது.
தற்போது பதவியேற்றிருக்கும் பாஜக அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், பின்தங்கிய நிலையில் இருக்கும் இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதை விடுத்து, சிறுபான்மை மக்களை அச்சப்படுத்தும் விதமாக கருத்துக்களை கூறிவருகின்றனர். இதனை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் விசயத்திலும், அவர்களின் நலனை பாதுகாக்கும் விசயத்திலும் அக்கறைகொண்டு செயல்பட வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது.
கடந்தகால காங்கிரஸ் ஆட்சியை போலவே இந்த ஆட்சியிலும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு கிடைத்த வாக்குகள் மூலம், கட்சியின் செயல்பாடு குறித்த மதிப்பீடு அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதை இத்தேர்தல் மூலம் அறிய முடிகிறது.
வரும் 2016 ல் நடைபெறவிருக்கின்ற தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்குவங்க மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் கட்சியின் செயல்பாடுகளை முடுக்கிவிடுவது எனவும், மேலும் ஒத்த கருத்துடைய கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சியிலும் ஈடுபடுவது என இச்செயற்ழுவில் முடிவு செய்யப்பட்டது.