ஓட்டுப் போட்ட 90 வயசு பாட்டி; விடாம கசியும் நீர்த்தொட்டி – இது ஸ்ரீரங்கம் கலாட்டா
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் காலைமுதலாக விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்துள்ள நிலையில் சில சுவாரசியமான விஷயங்களும் இத்தேர்தலில் இடம்பெறத் தவறவில்லை.
காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் அந்தநல்லூர் வாக்குச்சாவடியில் அதிகாலையிலேயே அதிக அளவில் பெண்கள் வந்து வரிசையில் நின்று வாக்களித்துச் சென்றனர்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஆர்வமாக வாக்களித்தவர்களில் ஆண்களை விடவும் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது.
மற்றொரு கிராமமான குழுமனையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தன்னுடைய தள்ளாத வயதினையும் பொருட்படுத்தாமல் ராமாயி என்ற 90 வயது மூதாட்டி வாக்கினைப் பதிவு செய்து ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவத்தினை இளம் தலைமுறையினருக்கு எடுத்துக் காட்டினார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலைப் பொறுத்த வரையில் 18 வயது நிரம்பி வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ள முதல்முறை இளம் வாக்காளர்கள் எட்டரை என்ற கிராமத்தில்தான் அதிக அளவில் வாக்களித்தனர்.
முதல் முறையாக வாக்களிக்கும் மகிழ்ச்சியுடன் இளையதலைமுறையினர் வரிசையில் நின்று தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தனர்.
இனாம் குளத்தூரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஒரே பள்ளிக் கூடத்திற்குள் 6 வாக்குப்பதிவு பூத்கள் அமைக்கப்பட்டிருந்ததால் பெரும் குழப்பமும், அதிக நேர காத்திருப்பும் நிகழ்ந்தது.
கம்பரசம்பேட்டை வாக்குச்சாவடி அருகே அமைந்துள்ள பஞ்சாயத்து நீர்த்தொட்டியில் ஏற்பட்டுள்ள விரிசலில் இருந்து தொடர்ச்சியாக நீர் கசிந்து வாக்குச்சாவடிக்கு அருகே சிறுகுளம் போல நீர் தேங்கிக் காணப்பட்டு வந்தது.
ஜீ.கே புரம் வாக்குச்சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கேமரா தாங்கிய வாகனம் ஒன்று திடீரென்று டயர் பழுதாகி நின்றது. பின்னர் டயர் பழுது சரிசெய்யப்பட்ட பின்னர் மீண்டும் தன்னுடைய பணியைத் துவங்கி தற்போது வரையில் சரியாக செயல்பட்டு வந்து தன்னுடைய பணியினை முடித்துக் கொண்டது